Published : 02 Aug 2025 07:41 AM
Last Updated : 02 Aug 2025 07:41 AM
புதுடெல்லி: அசைவ பால் மற்றும் மரபணு மாற்ற தானிய விவகாரங்களால் இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த ஏப்ரலில் வெளியிட்டார். இதன்காரணமாக உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் பங்கு சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து வரி விகிதத்தை குறைப்பது தொடர்பாக பல்வேறு நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கின. இந்திய தரப்பில் மூத்த பொருளாதார ஆலோசகர் ராஜேஷ் அகர்வாலும் அமெரிக்க தரப்பில் பிரென்டனும் கடந்த 5 மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் வேளாண் துறை சார்ந்த விவகாரங்களில் அமெரிக்காவின் கோரிக்கைகளை ஏற்க இந்தியா திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இதன்காரணமாக இரு நாடுகள் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்த சூழலில் வரும் 7-ம் தேதி முதல் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். மேலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தால் இந்தியாவுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் நேற்று முன்தினம் கூறும்போது, “நாட்டின் பொருளாதார நலன்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது’’ என்று விளக்கம் அளித்தார்.
இந்தியாவின் வியூகம்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் கண், காது, மூளை என்று வர்ணிக்கப்படும் அரசியல் வியூக நிபுணர் ஜேசன் மில்லர் கடந்த மே மாதம் இந்தியாவின் சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டார். ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்காக அவர் பணியாற்றி வருகிறார்.
மேலும் அமெரிக்க அரசின் மிக முக்கிய பதவிகளில் இந்திய வம்சாவளியினர் உள்ளனர். அந்த நாட்டின் முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாக இந்திய வம்சாவளியினர் பதவி வகிக்கின்றனர். அமெரிக்க அரசியலில், யூதர்களுக்கு இணையாக இந்தியர்களும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இது இந்தியாவின் அசைக்க முடியாத பலமாக கருதப்படுகிறது.
இந்த 'லாபியின்' காரணமாக இந்திய பொருட்கள் மீதான அமெரிக்க அரசின் 25 சதவீத வரி விதிப்பு அடுத்தடுத்து தள்ளி வைக்கப்படும் என்று தெரிகிறது. வரி விகிதம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வரும் 25-ம் தேதி அமெரிக்காவின் உயர்நிலைக் குழு டெல்லி வருகிறது.
அப்போது இருதரப்பிலும் கருத்து வேறுபாடுகள் முழுமையாக களையப்படும். இதன்பிறகு இந்திய உயர்நிலைக் குழு வாஷிங்டன் செல்லும். வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் அமெரிக்காவுடன் முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று நம்பப்படுகிறது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: தற்போது அமெரிக்க உணவு தானியங்களுக்கு சுமார் 40 சதவீத இறக்குமதி வரியை இந்தியா விதிக்கிறது. இந்த வரியை 10 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்துகிறது. இதை இந்தியா ஏற்க மறுத்துவிட்டது. அமெரிக்காவின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு தானியங்களை இறக்குமதி செய்யவும் மத்திய அரசு மறுத்துவிட்டது.
பன்றி, மீன், நாய், குதிரை ஆகியவற்றின் கொழுப்பு, ரத்தத்தில் இருந்து தயாரிக்கப்படும் புரோட்டீன், அமெரிக்க பசுக்களுக்கு உணவாக வழங்கப்படுகிறது. இந்த உணவை சாப்பிடும் பசுக்களில் இருந்து கிடைக்கும் பால், அசைவ பால் என்று கூறப்படுகிறது.
சில அமெரிக்க பால் உற்பத்தி நிறுவனங்கள், விலங்குகளின் எலும்புகளில் இருந்து பெறப்படும் நொதிகளை பாலில் கலக்கின்றன. எனவே அமெரிக்க நிறுவனங்களின் அசைவ பாலை இந்தியாவில் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்து உள்ளது.
இந்தியாவின் வேளாண்மை மற்றும் பால் வளத் துறையில் அமெரிக்க நிறுவனங்கள் கால் பதித்தால் கோடிக்கணக்கான இந்திய விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே வேளாண்மை சார்ந்த விவகாரங்களில் அமெரிக்காவின் கோரிக்கைகளை இந்தியா ஒருபோதும் ஏற்காது. இது, இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாவதில் மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.
அமெரிக்காவின் இயந்திர தளவாடங்கள், மின்சார வாகனங்கள், மதுபானங்கள், ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள், கொட்டை வகைகள் மீதான இறக்குமதியை குறைக்க வேண்டும் என்றும் அந்த நாடு வலியுறுத்துகிறது. இதுதொடர்பாக விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
அமெரிக்க மின்னணு சந்தையில் இந்திய தயாரிப்புகள் கோலோச்சி வருகின்றன. அதாவது அமெரிக்காவில் விற்பனையாகும் ஸ்மார்ட் போன்களில் 44 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை ஆகும். இதேபோல அமெரிக்காவில் விற்பனையாகும் ஆப்பிள் போன்களில் 78 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை ஆகும்.
இப்போதைய நிலையில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள், கணினிகள் உள்ளிட்ட மின்னணு பொருட்களுக்கு அமெரிக்க அரசு கூடுதல் வரி விதிக்கவில்லை. தற்போதைய 10 சதவீத வரியே தொடரும். 25 சதவீத வரி குறித்து பின்னர் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருக்கிறது. இது இந்திய மின்னணு நிறுவனங்களுக்கு தற்காலிக ஆறுதலாக அமைந்துள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய ஜவுளி, மருந்து துறைக்கு பாதிப்பு: இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி வகைகளில் சுமார் 28 சதவீதம் அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகிறது. இந்திய ஜவுளிகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்பட்டால் ஜவுளி ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும்.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகளில் சுமார் 40 சதவீதம் அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகிறது. மேலும் இந்தியாவில் இருந்து அரிசி, மளிகை பொருட்கள், வைரம், தங்க - வெள்ளி நகைகள், உருக்கு, அலுமினியம், தாமிரம் உள்ளிட்டவையும் அமெரிக்காவுக்கு கணிசமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அமெரிக்காவின் 25 சதவீத வரி விதிப்பு அமல் செய்யப்பட்டால் இவை சார்ந்த துறைகள் கடுமையாகப் பாதிக்கப்படும். கடந்த 2014-ல் இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தகம் 191 பில்லியன் டாலராக இருந்தது. வரும் 2030-ம் ஆண்டில் இரு நாடுகள் இடையே 500 பில்லியன் டாலர் வர்த்தகத்தை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. எனவே இருதரப்புக்கும் பலன் அளிக்கும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT