Published : 25 Jul 2025 06:35 AM
Last Updated : 25 Jul 2025 06:35 AM
சென்னை: இந்தியன் வங்கியின் 2025-ம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டு நிதிநிலை அறிக்கை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள வங்கியின் தலைமையகத்தில் நேற்று வெளியிடப்பட்டது.
பின்னர், வங்கி மேலாண்மை இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பினோத் குமார் செய்தியாளர்களிடம் கூறியது: 2025-ம் ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரை முடிந்த முதலாவது காலாண்டில், இந்தியன் வங்கியின் நிகர லாபம் 23.69 சதவீதம் வளர்ச்சியடைந்து, ரூ.2,973 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2024-ல் முதலாவது காலாண்டில் நிகர லாபம் ரூ.2,403 கோடியாக இருந்தது.
வங்கியின் செயல்பாட்டு லாபம் 2024-ல் முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது, ரூ.4.502 கோடியில் இருந்து ரூ.4,770 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலமாக, செயல்பாட்டு லாபம் 5.97 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது.
வங்கியின் நிகர வட்டி வருவாய் 2024-ல் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது, ரூ.6,359 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது, 2.93 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. சொத்துகள் மீதான லாபமீட்டல் நிலை 1.34 சதவீதமாகவும், பங்குகள் மீதான லாபமீட்டல் நிலை 20.26 சதவீதமாகவும் வளர்ச்சி அடைந்துள்ளது.
கடன்கள் மீதான வருவாய் 8.58 சதவீதமாகவும், முதலீடுகள் மீதான வருவாய் 6.96 சதவீதமாகவும் உள்ளது. மொத்த கடன்கள் 2024-ல் முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது, இந்த காலாண்டில் 11.50 சதவீதம் வளர்ச்சி பெற்று, ரூ.6.01 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. சில்லறை, விவசாயம், குறு, சிறு, நடுத்தர துறை ஆகியவற்றுக்கு வழங்கப்பட்ட கடன்கள் ரூ.3.63 லட்சம் கோடியாக உயர்ந்து, 15.93 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
வங்கியின் மொத்த வைப்புகள் 2024-ல் முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது, இந்தக் காலாண்டில் ரூ.7.44 லட்சம் கோடி என்ற அளவை எட்டியுள்ளது. இதன் மூலம், 9.26 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.
மொத்த வாராக் கடன்கள் முந்தைய ஆண்டுடன் (3.77 சதவீதம்) ஒப்பிடும் போது, இந்த காலாண்டில் அடிப்படை புள்ளிகள் 76 ஆக குறைந்து, 3.01 சதவீதமாக பதிவாகியிருந்தது. இதுபோல, நிகர வாராக்கடன்கள் கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த காலாண்டில் 0.39 சதவீதத்தில் இருந்து 0.18 சதவீதமாக பதிவாகி இருந்தது.
குறைந்தபட்ச இருப்பு நீக்கம்: இந்தியன் வங்கியின் சார்பில், இந்த ஆண்டு தமிழகத்தில் 10 புதிய வங்கி கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. இதில், மூத்த குடிமக்களுக்காக சென்னை அடையாறில் ஒரு வங்கி கிளை திறக்கப்பட்டுள்ளது. வங்கியின் குறைந்தபட்ச இருப்புத் தொகை அண்மையில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அதாவது, குறைந்த பட்ச இருப்பு இல்லாதவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் நீக்கப்பட்டுள்ளது. பார்வைத் திறனற்றோர்களுக்கு பிரெய்லி ஏடிஎம் கார்டு மற்றும் குரல் மூலம் செயல்படும் சிறப்பு செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, வங்கியின் செயல் இயக்குநர்கள் அசுதோஷ் சவுத்ரி, பிரஜேஷ் குமார் சிங் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT