Published : 11 Jul 2025 08:57 AM
Last Updated : 11 Jul 2025 08:57 AM

இலங்கைக்கு 30% வரி விதித்த அமெரிக்கா - அனுரகுமார அரசு மீது எதிர்க்கட்சிகள் விமர்சனம்

கொழும்பு: இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் அமெரிக்கா 30 சதவீத வரி விதிப்பை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து, அமெரிக்காவின் வரி விதிப்பு விவகாரத்தை சரியான வகையில் கையாளவில்லை என்று கூறி எதிர்க்கட்சிகள் இலங்கை அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.

இதுகுறித்து பிரதான எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கூறும்போது, “இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை உட்பட 7 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்கா கடிதங்களை அனுப்பியுள்ளது.

வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்காவுடன் சரியான பேச்சுவார்த்தையை இலங்கை அரசு முன்னெடுக்கவில்லை என்பதை இது வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது. . இலங்கை அரசின் மோசமான அணுகுமுறைக்கு நாம் கொடுக்கும் விலைதான் இந்த 30 சதவீத வரி விதிப்பு” என்றார்.

இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகாவுக்கு அமெரிக்க அனுப்பிய அந்த கடிதத்தில், “2025, ஆகஸ்ட் 1 முதல் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் எந்தவொரு இலங்கை பொருட்களுக்கும் 30 சதவீதம் வரி விதிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அமெரிக்காவின் இந்த 30 சதவீத வரி விதிப்பு இலங்கையின் உள்ளூர் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என பொருளாதார நிபுணர் தலால் ரஃபி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “அமெரிக்க ஏற்றுமதிகள் மீதான வரிகளை குறைக்க இலங்கை அரசு ஒப்புக்கொண்டிருக்க வேண்டும். அமெரிக்கப் பொருட்களின் மீதான வரிகளை நீக்க வியட்நாம் ஒப்புக்கொண்டதால், 20 சதவீத வரியுடன் அது தப்பித்துவிட்டது,” என்றார்.

அமெரிக்காவுக்கான இலங்கையின் வருடாந்திர ஏற்றுமதி 3 பில்லியன் டாலர் அளவுக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x