Published : 01 Jul 2025 07:49 AM
Last Updated : 01 Jul 2025 07:49 AM
புதுடெல்லி: நாட்டின் ஜிஎஸ்டி வசூல் கடந்த 5 ஆண்டில் இரட்டிப்பாகி, 2024-25 நிதியாண்டில் ரூ.22.08 லட்சம் கோடியாகி உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலுக்கு வந்தது.
ஜிஎஸ்டி அமலுக்கு வந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், “ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு வசூல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதன்மூலம் நாட்டின் நிதிநிலவரம் வலுவடைந்து வருகிறது’’ என கூறப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி அமலுக்கு வந்தபோது பதிவு செய்யப்பட்ட வரிதாரர்கள் எண்ணிக்கை 65 லட்சமாக இருந்தது. இது நடப்பு ஆண்டில் 1.51 கோடியைக் கடந்துள்ளது. கடந்த 2024-25 நிதியாண்டில் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.22.08 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 2020-21 நிதியாண்டில் ரூ.11.37 லட்சம் கோடியாக இருந்த வசூல், 5 ஆண்டில் இரட்டிப்பாகி உள்ளது.
கடந்த 2023-24 நிதியாண்டில் வசூலான ரூ.20.18 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது, 2024-25-ல் ஜிஎஸ்டி வசூல் 9.4% அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் சராசரியாக மாதந்தோறும் ரூ.1.84 லட்சம் கோடி வசூலாகி உள்ளது.
முந்தைய நிதியாண்டில் சராசரி மாதாந்திர வசூல் ரூ.1.68 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2.37 லட்சம் கோடியாக உயர்ந்தது. இது இதுவரை இல்லாத அதிகபட்ச ஒரு மாத வரி வசூல் ஆகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT