Last Updated : 23 Jun, 2025 11:39 AM

 

Published : 23 Jun 2025 11:39 AM
Last Updated : 23 Jun 2025 11:39 AM

ஈரான் தாக்குதல் எதிரொலி: கச்சா எண்ணெய் விலை 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு!

புதுடெல்லி: ஈரானின் அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியதை தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று (ஜூன் 23) உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.92 டாலர் அல்லது 2.49% உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 78.93 டாலராக இருந்தது. அதேபோல அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 1.89 டாலர் அல்லது 2.56% உயர்ந்து 75.73 டாலராக இருந்தது.

இது கடந்த ஜனவரி மாதத்துக்கு பிந்தைய உச்சபட்சமான விலை உயர்வு ஆகும். ஜூன் 13 அன்று இஸ்ரேல் ஈரான் போர் தொடங்கியதிலிருந்து, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 13% உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் இடைநிலை கச்சா எண்ணெய் விலை தோராயமாக 10% அதிகரிப்பைக் கண்டுள்ளது.

ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்களின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களின் விளைவாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. ஈரான் ஒபெக்-ன் (OPEC) மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளர் நாடு ஆகும்.

அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்த நிலையில், வரும் நாட்களில் விலை ஏற்றம் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கின்றனர். எனவே இப்போது கச்சா எண்ணெய் விலை ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது.

இதுகுறித்து பேசிய ஸ்பார்டா கமாடிட்டிஸின் மூத்த ஆய்வாளர் ஜூன் கோ, ‘ கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கியமான நீர்வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தி ஒரு மாதத்திற்கு மூடப்பட்டால், பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 110 டாலராக உயரக்கூடும்’ என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x