Last Updated : 19 Jun, 2025 02:26 PM

2  

Published : 19 Jun 2025 02:26 PM
Last Updated : 19 Jun 2025 02:26 PM

கைவிடப்பட்ட ‘கிரிஷ்மா’ திட்டத்தை செயல்படுத்துக: கிருஷ்ணகிரி மா விவசாயிகள் கோரிக்கை

படம்: எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரியில் மாங்கூழ் பதப்படுத்தவும், சந்தைப்படுத்தவும் அரசால் அறிவிக்கப்பட்டு, கைவிடப்பட்ட ‘கிரிஷ்மா’ திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் மா உற்பத்தியில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதன்மையிடத்தில் உள்ளது. இங்கு 35 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 3 லட்சம் மெட்ரிக் டன் மா உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக வறட்சி மற்றும் மாங்கூழ் ஆலை நிர்வாகிகளின் சிண்டிகேட் அமைத்து உரிய விலையில் மாங்காய் கொள்முதலைத் தவிர்த்தல் உள்ளிட்ட காரணங்களால் மா விவசாயிகள் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.

நிகழாண்டில்,மகசூல் அதிகரித்து விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாங்கூழ் தொழிற்சாலைகளில் கடந்த ஆண்டு அரவை செய்யப்பட்ட மாங்கூழை ஏற்றுமதி செய்ய முடியாத நிலையால், மா கொள்முதல் கடந்த ஆண்டுகளை போல இல்லை.

இந்நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு மாவிவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க அரசு அறிவித்த மாங்கூழ் பதப்படுத்தல் மற்றும் சந்தைப் படுத்தலுக்காக, ‘கிரிஷ்மா’ திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். சத்துணவில் மாங்கூழ் வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ராமகவுண்டர் மற்றும் விவசாயிகள் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் 3.50 லட்சம் மெட்ரிக் டன் மா உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், 2 லட்சம் மெட்ரிக் டன் மா நுகர்வுக்கும், மாங்கூழாக மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 1.50 லட்சம் மெட்ரிக் டன் மாங்காய்கள் பயன்படுத்த முடியாத நிலையுள்ளது.

இதனால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். மா விவசாயிகளைக் காக்க கடந்த 2006-ல் ஆண்டு ரூ.150 கோடியில், ‘கிரிஷ்மா’ திட்டத்தை அரசு அறிவித்தது. இதற்காக ஆலப்பட்டியில் 75 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கிருஷ்ணகிரியில் தயாரிக்கப்படும் மாங்கூழ் வெளிநாடுகளில் ஒரே பெயரில் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதற்காக இத்திட்டத்துக்கு, ‘கிரிஷ்மா’ எனப் பெயரிடப்பட்டது.

ஆனால், இத்திட்டம் பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது, மா விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க , ‘கிரிஷ்மா’ திட்டத்தைச் செயல்படுத்த மீண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மா விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க முதல்வர் நேரடியாகத் தலையீட்டுத் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x