Published : 07 Jun 2025 06:41 AM
Last Updated : 07 Jun 2025 06:41 AM
சென்னை: தமிழக ஐடிஐ-க்களில் மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் சோலார் திறன் மேம்பாட்டு மையங்களை அமைப்பதற்கான திட்டத்தில் டாடா பவர் நிறுவனமும் தமிழ்நாடு அரசும் கையெழுத்திட்டுள்ளன.
மாநிலத்தில் பசுமை எரிசக்தி துறையில் மாணவர்களின் திறன் மேம்பாட்டை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, மாநிலத்தில் உள்ள ஐடிஐ.க்களில் சோலார் திறன் மேம்பாட்டு மையங்களை அமைப்பதற்காக டாடா பவர் அதன் திறன் மேம்பாட்டு பிரிவான டிபிஎஸ்டிஐ மூலம் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநரகத்துடன் (டிஇடி) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன்படி, முதல்கட்டமாக 4 சோலார் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் திருநெல்வேலி பேட்டை, தூத்துக்குடி, சாத்தூர் மற்றும் விருதுநகரில் உள்ள அரசு ஐடிஐ-க்களில் அமைக்கப்பட உள்ளன. இந்த முயற்சியின் மூலம் சூரிய ஆற்றலிலும், காற்றாலை மற்றும் பசுமை ஹைட்ரஜன் தொடர்புடைய துறைகளிலும் ஐடிஐ மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சி கிடைக்கும்.
கூடுதல் பிராந்திய திறன் தேவையை அரசு அடையாளம் காணும்பட்சத்தில் எதிர்காலத்தில் இதுபோன்ற பல சோலார் பயிற்சி மையங்கள் மேலும் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. பசுமை எரிசக்தி வேலைவாய்ப்பில் இளைஞர்களை தயார்படுத்துவதற்கும் தலைமைத்துவத்துடன் செயல்பட வைப்பதற்கும் இந்த திட்டம் உறுதுணையாக அமையும். டிஇடி உள்கட்டமைப்பை வழங்கும் அதேவேளையில் பாடத்திட்ட வடிவமைப்பு, பயிற்சி, சான்றிதழ் வழங்குதலை டிபிஎஸ்டிஐ கண்காணிக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT