Published : 07 Jun 2025 12:23 AM
Last Updated : 07 Jun 2025 12:23 AM
மும்பை: வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவீதமாக குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதனால், வீடு, வாகன கடன்களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் 2 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு கூட்டம் (எம்பிசி)கடந்த 4-ம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் குறைத்து 5.5 சதவீதமாக நிர்ணயிக்க ஒருமனதாக ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. பணவீக்கம் குறைந்துள்ளதை சுட்டிக்காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியுள்ளதாவது: நாட்டின் முக்கிய 5 துறைகளின் நிதிநிலை குறிப்பு வலுவான நிலையில் இருப்பது மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்திய பொருளாதாரம் மகத்தான வாய்ப்புகளை வழங்குகிறது.
சர்வதேச பொருளாதாரம் பலவீனமான நிலையில் இருந்தாலும், இந்தியாவின் வளர்ச்சி வேகம்அதிகமாக உள்ளது. பணவீக்கமும் கணிசமான அளவுக்கு குறைந்துள்ளது. ஏப்ரல் மாதத்துக்கான சில்லறை பணவீக்கம் 4 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், நடப்பு நிதி ஆண்டில் இந்த பணவீக்கம் 3.7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பொருளாதார குறியீடுகள் வலுவான நிலையில் உள்ளன. செலவினம், தனியார் நுகர்வு படிப்படியாக அதிகரித்து வருகிறது. தொழில்துறை நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளன. சேவை துறை வேகத்தை தக்க வைத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. நகர்ப்புற தேவை மேம்பட்டு வரும் அதே வேளையில் கிராமப்புற தேவை சீராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால், வீடு, வாகன கடன்களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நீண்டகால கடன் தவணை செலுத்தும் வீட்டுகடன் வாடிக்கையாளர்கள் இதனால் பெரிதும் பலனடைவார்கள் என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT