Published : 02 Jun 2025 06:27 AM
Last Updated : 02 Jun 2025 06:27 AM
சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் முட்டைக்கோஸ் விலை வீழ்ச்சி அடைந்து, மொத்த விலையில் கிலோ ரூ.5-க்கு விற்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு சந்தையில் கோடை காலத்தில் காய்கறி விலை சற்று உயர்ந்திருக்கும். ஆனால் இந்த ஆண்டு கத்திரி வெயில் கடந்த மே 5-ம் தேதி தொடங்கி, 28-ம் தேதி நிறைவடைந்த நிலையில், மே 23-ம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கி, தமிழகத்தில் தீவிரமடைந்து பரவலாக மழை பெய்தது. இதனால் இந்த ஆண்டு கோடை காலத்தில் கத்திரி வெயிலின் சுவடே தெரியாமல் போனது.
இதன் காரணமாக தமிழகத்தில் மே மாதத்தில் காய்கறிகளின் விலை குறிப்பிடும்படியாக உயரவில்லை. முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலை, மொத்த விலையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் நேற்றைய நிலவரப்படி முட்டைக்கோஸ் கிலோ ரூ.5 ஆகவும், புடலங்காய், முள்ளங்கி ஆகிய காய்கறிகள் கிலோ ரூ.10 ஆகவும் வீழ்ச்சி அடைந்திருந்தது.
மற்ற காய்கறிகளான பீன்ஸ் ரூ.70, முருங்கைக்காய் ரூ.50, சாம்பார் வெங்காயம் ரூ.40, நூல்கோல் ரூ.25, பாகற்காய், பச்சை மிளகாய், வெண்டைக்காய், கேரட் தலா ரூ.20, தக்காளி ரூ.18, உருளைக்கிழங்கு ரூ.16, கத்தரிக்காய், பீட்ரூட் தலா ரூ.15, வெங்காயம் ரூ.14 என விற்கப்பட்டு வருகிறது. முட்டைக்கோஸ் விலை வீழ்ச்சி அடைந்திருப்பது தொடர்பாக கோயம்பேடு சந்தை மொத்த வியாபாரிகளிடம் கேட்டபோது, ``தற்போது வரத்து அதிகமாக இருப்பதால் அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. வரும் வாரங்களில் அதன் விலை உயர வாய்ப்புள்ளது'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT