Published : 31 May 2025 07:08 PM
Last Updated : 31 May 2025 07:08 PM

‘ஜிஎஸ்டி பதிவுக்கு லஞ்சம்...’ - லிங்கிடுஇன் பயனரின் குற்றச்சாட்டும், நிர்மலா சீதாராமனின் ரியாக்‌ஷனும்

நிர்மலா சீதாராமன் | கோப்புப்படம்

புதுடெல்லி: ஜிஎஸ்டி பதிவு செயல்பாடுகளில் லஞ்சக் குற்றச்சாட்டு கூறிய சமூக வலைதள பயனர் ஒருவரின் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதற்கு நேரடியாக பதில் அளித்துள்ளார்.

இந்தியாவில் நிதிக் கல்விப்புலத்தில் நன்கு அறிப்படும் வி.ஜி.லெர்னிங் டெஸ்டினேஷனின் நிறுவனரும், இயக்குநருமான வினோத் குப்தா லிங்கிடுஇன்-ல் வெளியிட்ட பதிவு வைரலானதைத் தொடர்ந்து, நிதியமைச்சரின் எதிர்வினை வந்துள்ளது.

வினோத் குப்தாவும், அவரது மனைவியும் இணைந்து நடத்த விரும்பும் நிறுவனத்துக்கு ஜிஎஸ்டி எண்ணுக்கு விண்ணப்பித்து 20 நாட்கள் கடந்தும் இன்னும் ஜிஎஸ்டி எண் கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார். மேலும், லஞ்சம் கொடுத்தால் எண் விரைவாக கிடைக்கலாம் என்றும் கூறியிருந்தார். அவரின் இந்தப் பதிவுக்கு நிதியமைச்சர் நிர்மலா பதில் அளித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பான CBIC-ன் விரிவான பதிலையும் இணைத்துள்ளார்.

நிதியமைச்சர் பதில்: அமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வரி செலுத்துவோருக்கு சேவை செய்வது நமது பொறுப்பு. அவ்வாறு செய்யும்போது நாம் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் நாம் அவர்களின் நம்பிக்கையை பெற முடியும். ஜிஎஸ்டி வாரியமும் அதிகாரிகளும் மக்களின் பிரச்சினைகளுக்கு பதில் அளிக்கும்போது கவனமாகவும் விரைவாகவும் இருப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

குப்தா குற்றச்சாட்டு: முன்னதாக, வினோத் குப்தா தனது பதிவில், "நாளை நான் ஒரு குற்றம்புரிய இருக்கிறேன். லஞ்சம் கொடுப்பதும், பெறுவதும் குற்றம். எனது மனைவியும் மகளும் கூட்டாளிகளாக இருக்கும் ஒரு நிறுவனத்துக்கு ஜிஎஸ்டி எண் பெற 20 நாட்களுக்கு முன்பு விண்ணப்பித்திருந்தேன். ஆட்சேபனைகள் வரத்தொடங்கி உள்ளன. தற்போது வரை, ஜிஎஸ்டி எண் வழங்கப்படவில்லை. அதனால் நான் நாளை ஜிஎஸ்டி எண்ணைப் பெற முடிவு செய்துள்ளேன். அந்தக் குற்றத்தை நான் செய்த பின்பு எனக்கு கட்டாயம் ஜிஎஸ்டி எண் கிடைக்கும் என்பது தெரியும்" என்று தெரிவித்திருந்தார்.

சிபிஐசி விளக்கம்: இதனிடையே, வினோத் குப்தாவின் குற்றச்சாட்டுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியமும் (CBIC) ஒரு விரிவான விளக்கம் அளித்திருந்தது. அதில், "குப்தாவின் விண்ணப்பம் மே 26-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது டெல்லி ஜிஎஸ்டி அதிகார வரம்புக்குள் உள்ளது. மத்திய ஜிஎஸ்டி அதிகார வரம்புகுள் இல்லை” என்று கூறியிருந்தது.

மேலும், வாடகை ஒப்பந்தத்தில் பெயர் இல்லாததால் அவரிடம் அது குறித்து கேட்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் அதற்கு இன்னும் விளக்கம் அளிக்கவில்லை என்று கூறியிருந்தது.
மேலும், வினோத்தின் பதிவு வைரலானதைக் கண்டித்திருக்கும் வாரியம், தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x