Published : 31 May 2025 06:46 PM
Last Updated : 31 May 2025 06:46 PM
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழையும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் லேசான மழையும் பெய்து வருகிறது. தொடர் மழையால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. வரத்து குறைவு காரணமாக பெரும்பாலான காய்கறிகள் விலை உயர்ந்துள்ளன.
விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டது தென்காசி மாவட்டம். மாவட்டத்தில் பரவலாக காய்கறி வகை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பாவூர்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை சந்தைகளில் விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்கின்றனர். தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு அதிக அளவில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. வியாபாரிகள் மொத்த விலைக்கு காய்கறிகளை வாங்கிச் சென்று வியாபாரம் செய்கின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழையும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் லேசான மழையும் பெய்து வருகிறது. தொடர் மழையால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. வரத்து குறைவு காரணமாக பெரும்பாலான காய்கறிகள் விலை உயர்ந்துள்ளன.
கடந்த வாரம் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ கத்தரிக்காய் விலை 40 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 80 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. 40 ரூபாயாக இருந்த சின்ன வெங்காயம் விலை 85 ரூபாய் வரையும், 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அவரைக்காய் 140 ரூபாய் வரையும், 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மிளகாய் 60 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ முருங்கைக்காய் 10 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 100 ரூபாயாக உயர்ந்துள்ளது.
மற்ற காய்கறிகள் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பீட்ரூட் 40 ரூபாய்க்கும், பாகற்காய் 30 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 30 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 60 ரூபாய்க்கும், காலிபிளவர் 70 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் 120 ரூபாய்க்கும், கருணைக்கிழங்கு 140 ரூபாய்க்கும், கேரட் 40 ரூபாய்க்கும், புடலங்காய் 40 ரூபாய்க்கும், முள்ளங்கி 40 ரூபாய்க்கும், சவ்சவ் 20 ரூபாய்க்கும், வெள்ளைப்பூண்டு 160 ரூபாய்க்கும், தேங்காய் 1 கிலோ 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
விளைச்சல் குறைவு காரணமாக விலை உயர்வால் லாபம் கிடைக்கவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். ஒரு வாரத்தில் பெரும்பாலான காய்கறிகள் 2 மடங்குக்கும் அதிகமான விலைக்கு விற்பனையாவதால் ஏழை, எளிய மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT