Published : 31 May 2025 12:30 AM
Last Updated : 31 May 2025 12:30 AM

நிதியமைச்சகம் பரிந்துரை: தங்க நகை கடன் புதிய விதிமுறைகள் குறித்த இறுதி முடிவை விரைவில் அறிவிக்கிறது ரிசர்வ் வங்கி!

புதுடெல்லி: ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளி​யிட்ட தங்க நகை கடனுக்​கான விதி​முறை​களை மறு​பரிசீலனை செய்து, சிறுகடன் பெறு​வோர் பயன்​பெறும் வகை​யில் தளர்​வு​களை அறிவிக்க வேண்​டும் என மத்​திய நிதி அமைச்​சகம் ரிசர்வ் வங்​கியை அறிவுறுத்தி​யுள்​ளது.

முறை​கேடு​களை தடுக்கும் நோக்கில், வங்​கி​களில் தங்க நகை கடன் பெறும் விதி​களை கடுமை​யாக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த ஏப்​ரல் மாதம் புதிய வரைவு கொள்கையை ரிசர்வ் வங்கி வெளி​யிட்​டது. அதன்படி, கடன் - மதிப்பு விகிதம் 75% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.100 மதிப்புள்ள தங்கநகைகளை அடமானம் வைத்தால், அதிகபட்சம் ரூ.75 மட்டுமே கடனாக பெற முடியும். இதுவரையில் நகையின் மதிப்பீட்டில் சுமார் 90% வரை கடன் வழங்கப்பட்டு வந்தது. இந்த விதியை அமல்படுத்தும்போது, கடன் தொகை கணிசமாக குறையும்.

புதிய விதிமுறைகளின்படி கடன் வாங்குபவர்கள் அடமானம் வைக்கப்படும் நகைக்கு, தான் உரிமையாளர் என்ற ஆதாரத்தை வழங்க வேண்டும். நகையின் உரிமை சந்தேகத்துக்குரியதாக இருந்தால் கடன் வழங்கப்படாது. அசல் ரசீதுகள் இல்லாதபட்சத்தில் கடன் பெறுபவர்கள் இந்த நகை தங்களுக்கு எப்படி உரிமையானது என்பதை விளக்கும் வகையில் ஒரு அறிக்கை தர வேண்டும்.

கடன் வழங்குபவர்கள், தாங்கள் பெறும் நகைகளின் தூய்மை, எடை மற்றும் மதிப்பு குறித்த சான்றிதழை வழங்க வேண்டும். அடமானம் வைக்கப்படும் நகையின் படத்தையும் இணைக்க வேண்டும். தங்க நகைகள், ஆபரணங்கள் மற்றும் குறிப்பிட்ட தங்க நாணயங்கள் மட்டுமே தங்க நகைக் கடனுக்கு பிணையமாக தகுதியுடையவை.

ஒரு கடனாளி அடகு வைக்கும் தங்க நகைகளின் மொத்த எடை 1 கிலோவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பிணையமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தங்கம், 22 காரட் தங்கத்தின் விலையின் அடிப்படையில் மதிப்பிடப்படும். இவ்வாறு பல விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

முதல்வர் ஸ்டாலின் கடிதம்: இதற்கு தமிழக அரசி​யல் கட்​சிகள், விவ​சாய சங்​கங்​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​தன. தமிழக முதல்​வர் ஸ்​டா​லினும் இதுதொடர்​பாக மத்​திய நிதி அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமனுக்கு கடிதம் எழு​தி​னார். கடிதத்​தில் முதல்​வர் கூறி​யிருந்​த​தாவது:

விவ​சா​யிகளின் ரூ.2 லட்​சம் வரையி​லான பயிர் கடன்​களுக்கு தங்க நகைகளை ஈடாக ஏற்​றுக்​கொள்​வதை தடுக்​கும் வகை​யில் இந்​திய ரிசர்வ் வங்கி வரைவு வழி​காட்டு நெறி​முறை​களை வெளி​யிட்​டுள்​ளது. தங்​கத்தை பிணை​யாக பெற்று வழங்​கப்​படும் கடன்​கள் சரி​யான நேரத்​தில், குறுகிய​கால பயிர் கடன்​களுக்​கான முதன்மை ஆதா​ர​மாக விளங்​கு​கிறது. குறிப்​பாக, சிறு, குறு விவ​சா​யிகள், குத்​தகை​தா​ரர்​கள், பால் பண்​ணை, கோழி பண்​ணை, மீன்​வளம் தொடர்​பான தொழில்​களில் ஈடு​பட்​டுள்​ளவர்​கள் இந்த புதிய நடை​முறை​யால் பாதிக்​கப்​படு​வார்​கள்.

அவர்​கள் அதிக வட்டி வசூலிக்​கும் முறை​சாரா மற்​றும் ஒழுங்​குபடுத்​தப்​ப​டாத கடன் வழங்​கும் நிறு​வனங்​களை நோக்கி செல்ல வேண்​டிய கட்​டா​யம் ஏற்​படும். இது அவர்​களை சுரண்​டலுக்கு ஆளாக்​கும். அவர்​களது கடன்​சுமையை அதி​கரிக்​கும். எனவே, நகைக்​கட​னுக்​காக முன்​மொழியப்​பட்​டுள்ள கட்​டுப்​பாடு​களை மறு​பரிசீலனை செய்ய இந்​திய ரிசர்வ் வங்​கிக்கு அறி​வுறுத்​து​மாறு கேட்​டுக் கொள்​கிறேன்.

இவ்​வாறு கடிதத்​தில் முதல்​வர் தெரி​வித்​திருந்தார். இதே கருத்தை வலி​யுறுத்தி ரிசர்வ் வங்​கி​யின் கவர்​னருக்​கும் முதல்​வர் ஸ்டாலின் கடிதம் எழு​தி​யிருந்​தார்.

இந்த நிலை​யில், மத்திய நிதி​ அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமனின் வழி​காட்​டு​தலின்கீழ், ரிசர்வ் வங்​கிக்கு நிதி அமைச்​சகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில், ‘ரூ.2 லட்​சத்​துக்​கும் குறை​வாக கடன் வாங்​குபவர்​களுக்கு விரை​வான மற்​றும் எளி​தான கடன் அணுகலை உறுதி செய்ய வேண்டும். அதற்​காக இந்த கடுமை​யான விதி​முறை​களில் இருந்து விலக்கு அளிக்​கப்பட வேண்​டும். மேலும், கடன் வழங்​குநர்​கள் புதிய விதி​முறை​களுக்கு மாற ஏது​வாக, இந்த புதிய விதி​களை 2026 ஜனவரி 1-ம் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும்’ என்று பரிந்​துரைக்கப்பட்டுள்​ளது.

ரிசர்வ் வங்கி தற்​போது பொது​மக்​கள் மற்​றும் வங்​கி​களிட​ம் இருந்து வந்துள்ள கருத்​து​களை மதிப்​பாய்வு செய்து வரு​கிறது. புதிய வி​தி​களை செயல்​படுத்​து​வது குறித்த தனது இறுதி முடிவை ரிசர்வ்​ வங்​கிவிரைவில் அறிவிக்​கும்​ என எதிர்​பார்க்​கப்​படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x