Published : 30 May 2025 08:37 PM
Last Updated : 30 May 2025 08:37 PM

அமெரிக்காவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை

டெல்லியில் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலை ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத் துணைத் தலைவர் ஏ.சக்திவேல் சந்தித்துப் பேசினார்

இதிருப்பூர்: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நேர்மறையாக நடைபெற்று வருவதாகவும், இருதரப்புக்கும் பயனளிக்கும் வகையிலான ஒரு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியிருப்பதாக, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக துணைத் தலைவர் சக்திவேல் கூறியுள்ளார்.

தொழில் வளர்ச்சி மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (ஏஇபிசி) துணைத் தலைவர் ஏ.சக்திவேல், டெல்லியில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை இன்று (மே 30) சந்தித்தார். தொடர்ந்து ஆயத்த ஆடை துறையின் தற்போதைய நிலை, எதிர்கால வாய்ப்புகள் மற்றும் சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது பேசினர். இதில் தொழில்துறையின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அமைச்சரிடம் ஏ.சக்திவேல் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் இந்தியா - இங்கிலாந்து இடையிலான வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு தொடர்ச்சியாக பியூஷ் கோயல் எடுத்த முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பிலும் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து அமெரிக்காவுடன் நடைபெற்று வரும் இருதரப்புச் வர்த்தக பேச்சு வார்த்தைகள் குறித்தும் தகவல் கேட்டறிந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர், “பேச்சுவார்த்தைகள் நேர்மறையாக நடைபெற்று வருவதையும், பரஸ்பரம் பயனளிக்கும் வகையிலான ஒரு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என நம்பிக்கை அளித்துள்ளார். இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த உற்சாகம் அளிக்கக்கூடியதாக இருக்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து ஏ.சக்திவேல் கூறியது: “மிகவும் பயனுள்ள மற்றும் உற்சாகமான சந்திப்பாக இது அமைந்தது. அரசின் வர்த்தக ஒப்பந்தங்களை விரைவில் நிறைவேற்றும் முயற்சிகள், நம் தொழில்துறைக்கு புதிய நம்பிக்கையையும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் அளிக்கின்றன. இந்த சாதகமான சூழலில் அனைத்து உறுப்பினர்களும், நிறுவன விரிவாக்கம் நோக்கி தயாராக வேண்டும். தற்போதைய சந்தை சூழ்நிலை வளர்ச்சிக்கு சாதகமாக உள்ளதால், அனைத்து ஏற்றுமதியாளர்களும் இது போன்ற வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். தொழில்துறையை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்ல, நாம் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x