Published : 30 May 2025 07:04 AM
Last Updated : 30 May 2025 07:04 AM
வாஷிங்டன்: அமெரிக்காவின் பட்ஜெட் திட்டம் ஏமாற்றம் அளித்ததால், அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து தொழிலதிபர் எலான் மஸ்க் வெளியேறினார். அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப் 2-வது முறையாக பதவியேற்றதும் அரசு செலவினங்களை குறைப்பதற்காக, தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையில் அரசு செயல்திறன் துறை (டிஓஜிஇ) என்று உருவாக்கப்பட்டது.
ஆண்டு தோறும் எலான் மஸ்க் 130 நாட்கள் சிறப்பு அரசு ஊழியராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டது. இத்துறை அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது உட்பட பல ஆலோசனைகளை அமெரிக்க அரசுக்கு வழங்கி வந்தது. இதற்கு அமெரிக்காவில் எதிர்ப்பும் கிளம்பியது.
இந்நிலையில் அமெரிக்க அரசின் பட்ஜெட் தயார் செய்யப்பட்டது. இது எலான் மஸ்க் தலைமையிலான அரசு செயல்திறன் துறை தெரிவித்த பரிந்துரைகளுக்கு மாறாக இருந்துள்ளது. மக்களுக்கு ஏராளமான வரிச்சலுகைகளுடன், ராணுவ பட்ஜெட் செலவினங்களும் அதிகமாக இருந்தது.
கடந்த 2017-ம் ஆண்டு அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் பல வரிச்சலுகைகளை அளித்தது. அதேபோல் தற்போதும் 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு 1,300 டாலர் கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் பயனடைவர்.
பட்ஜெட் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. அதிபர் ட்ரம்பின் மிகப் பெரிய மற்றும் அருமையான பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக தொழிலதிபர் எலான் மஸ்க் கூறினார்.
இந்நிலையில் எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘ சிறப்பு அரசு ஊழியராக எனக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிவுக்கு வருகிறது. வீண் செலவினங்களை குறைக்க வாய்ப்பளித்த அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு நன்றி.’’ என தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ‘‘ அமெரிக்க அரசின் மிகப் பெரிய பட்ஜெட், நிதி பற்றாக்குறையை அதிகரித்துள்ளது. அரசு செயல்திறன் துறையின் பணிகளை குறைத்து மதிப்பிட்டுள்ளது. இந்த பட்ஜெட் பெரியதாக இருக்கலாம் அல்லது அருமையானதாக இருக்கலாம். ஆனால் இரண்டும் சேர்ந்ததாக இருக்குமா என தெரியவில்லை’’ என கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT