Published : 29 May 2025 09:32 PM
Last Updated : 29 May 2025 09:32 PM
கோவை: இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பம்ப்செட் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், வழக்கமாக மிக அதிக வியாபாரம் நடக்கும் மே மாதம் மந்த நிலையில் காணப்படுவதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் பம்ப்செட் தேவையை பூர்த்தி செய்வதில் கோவை மாவட்டத்தில் உள்ள பம்ப்செட் உற்பத்தி தொழில் நிறுவனங்கள் 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை கொண்டுள்ளன. வழக்கமாக கோடை காலத்தில் பம்ப்செட் தேவை அதிகம் காணப்படும் நிலையில், இந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய காரணத்தால் விற்பனையில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இந்திய பம்ப்செட் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கார்த்திக் கூறும்போது, “மே மாதத்தில் பம்ப்செட் விற்பனை மிக அதிகளவில் இருக்கும். ஆனால் இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதால் பம்ப்செட் விற்பனையில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வீடு மற்றும் விவசாய தேவைக்கான பம்ப்செட் விற்பனை மிகவும் குறைந்துள்ளது.
ஏற்கெனவே கடந்த ஆண்டு பம்ப்செட் விற்பனை மந்தமாக இருந்த நிலையில், இவ்வாண்டு நெருக்கடியில் இருந்து மீண்டு வர வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ‘ஜல் ஜீவன்’ போன்ற தண்ணீர் தொடர்பான திட்டங்களுக்கு அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என்றார்.
தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (சீமா) தலைவர் மிதுன் ராம்தாஸ் கூறும்போது, “காலநிலை மாற்றத்தால் மழை இல்லாத காலங்களில் மழை பெய்வது, பருவமழை முன்கூட்டியே தொடங்குவது போன்றவை பம்ப்செட் தொழிலை கடுமையாக பாதித்துள்ளது. செப்டம்பர் வரை மந்த நிலை தொடரும் என்றும், அதற்கு பின் பம்ப்செட் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT