Published : 29 May 2025 04:02 PM
Last Updated : 29 May 2025 04:02 PM

கிராம வீட்டுமனை திட்டங்களுக்கு செலவு குறைந்த கட்டிட தொழில்நுட்பம் @ ஆரோவில்

கிராமப்புற வீட்டுமனை வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவு குறைந்த கட்டிடத் தொழில் நுட்பங்கள் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், கூடுதல் ஆட்சியர் பத்மஜா மற்றும் மாவட்ட நிர்வாகக் குழுவினர், ஆரோவில் அறக்கட்டளையை சந்தித்தனர்.

ஆரோவில்லில் பயன்படுத்தப்படும் குறைந்த செலவு மற்றும் புதுமையான மேற்கூரை மற்றும் சுவர் அமைப்புப் பொருட்களை நேரில் பார்வை யிட்டனர். இந்தக் குழுவில் ஏடிடிசி உறுப்பினர் சிந்து ஜா, ஏடிஎஸ்சி உறுப்பினர் அந்திம் மற்றும் ஆரோவில்லே அறக்கட்டளையின் மூத்த ஆலோசகர் ஸ்ரீ கோஷி வர்கீஸ் ஆகியோர் பங்கேற்றனர். கனரக கான்கிரீட் இல்லாமல், இயற்கை மற்றும் நிலைக் கருவியான பொருட்களைப் பயன்படுத்தி இரண்டு அல்லது மூன்று மாடி கட்டமைப்புகளை எழுப்பும் தனித்துவமான கட்டுமான முறைகளை இக்குழுவினர் பார்வையிட்டனர்.

அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் (CSR) அழுத்தப்பட்ட நிலைப்படுத்தப்பட்ட மண் செங்கற்கள் (CSEB), எஃப்.சி சேனல் மேற்கூரை அமைப்புகள், நிலையான கட்டுமான முறைகளால் கட்டப்பட்ட கட்டுமானங்கள், சூறாவளியினால் வீழ்ந்த மரங்களை மீண்டும் பயன்படுத்தும் வகையில் பூஜ்ஜிய கழிவு நோக்கத்துடன் செயல்படும் மரச்சாமான் பட்டறையையும் பார்வையிட்டனர். இயற்கை கை சோப்பு, பாத்திரங்கழுவி, நறுமண மெழுகுவர்த்திகள் போன்ற உயிரியல் அடிப்படையிலான தயாரிப்புகளை உருவாக்கும் ப்ரோ பயாடிக் பிரிவையும் பார்வையிட்டனர்.

ஆரோவில் கட்டிடக்கலை மற்றும் கைவினைப் பொருட்கள், பெண் தொழில் முனைவோருக்கான திட்டங்கள் குறித்து ஆரோவில் அதிகாரிகளுடன் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் விரிவாக பேசினார். வீடற்றோர் மற்றும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PM-AY) திட்டத்தின் கீழ், விழுப்புரம் மாவட்டத்தில் இத்தகைய செலவு குறைந்த வீடுகளை அமல்படுத்தும் திட்டங்களை ஆராய திட்டமிட்டுள்ளதாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x