Published : 24 May 2025 08:03 AM
Last Updated : 24 May 2025 08:03 AM

செமி கண்டக்டர் மையமாக வடகிழக்கு உருவெடுக்கும்: முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: செமி கண்டக்டர் மையமாக வடகிழக்கு மாநிலங்கள் உருவெடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று வடகிழக்கு முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது. இதில் அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள், ஆளுநர்கள், தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரதமர் நரேந்திர மோடி முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

உலக நாடுகளில் அதிக பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா. இதற்கு இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மிகச் சிறந்த உதாரணம் ஆகும். வடகிழக்கில் பல்வேறு சமுதாய மக்கள் வசிக்கின்றனர். வரும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம். இந்த இலக்கை எட்ட வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி மிகவும் முக்கியம். இந்த பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் சுமார் 700 தடவை கிழக்கு மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளனர்.

ஆசியான் நாடுகள் உடனான வர்த்தக உறவில் வடகிழக்கு மாநிலங்கள் நுழைவு வாயிலாக திகழ்கின்றன. அங்கிருந்து தாய்லாந்து, வியட்நாம், லாவோஸ் நாடுகளுக்கு எளிதாக செல்ல முடிகிறது. கொல்கத்தாவில் இருந்து மிசோரம் வழியாக ஒட்டுமொத்த வடகிழக்கையும் கடல் வழியாக இணைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் வடகிழக்கின் தொழில் அபரிதமாக வளர்ச்சி அடையும். குவாஹாட்டி, இம்பால், அகர்தலா நகரங்கள் வர்த்தக மையங்களாக உருவாக்கப்படும். வடகிழக்கு மாநிலங்களின் சுற்றுலா துறை வளர்ச்சி அடைய ஊக்கம் அளிக்கப்படும்.

ஒரு காலத்தில் வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம் தலைதூக்கி இருந்தது. சாலை மறியல், கடை அடைப்பு அன்றாட நிகழ்வுகளாக இருந்தது. மத்திய அரசு, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால் வடகிழக்கில் அமைதி நிலவுகிறது. ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களும் முன்னேற்ற பாதையில் செல்கின்றன. 13,000 கி.மீ. தொலைவுக்கு ஆப்டிக்கல் பைபர் இணைய கேபிள் பதிக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு முழுவதும் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அடுத்தகட்டமாக எரிசக்தி, செமிகண்டக்டர் துறையின் உற்பத்தி மையமாக வடகிழக்கு உருவெடுக்கும்.

மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வடகிழக்கில் புதிதாக 850 பள்ளிகள் தொடங்கப்பட்டு உள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டு உள்ளது. புதிதாக 9 மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்டு உள்ளன. நாட்டின் முதல் விளையாட்டு மருத்துவமனை வடகிழக்கில் தொடங்கப்பட்டு இருக்கிறது.

உலகம் முழுவதும் இயற்கை வேளாண் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்த வாய்ப்பை வடகிழக்கு மாநிலங்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். வடகிழக்கின் தேநீர், ஆரஞ்சு, எலுமிச்சை, இஞ்சி, மஞ்சளுக்கு உலக அறவில் பெரும் வரவேற்பு உள்ளது. இவற்றை அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும்.

விவசாயிகளின் நலனுக்காக வடகிழக்கின் பல்வேறு பகுதிகளில் வேளாண் விளைபொருட்களை பதப்படுத்துவதற்கான கிடங்குகள், உணவு பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது வெளிநாடுகளில் இருந்து பெருமளவில் பாமாயிலை இறக்குமதி செய்து வருகிறோம். இதை குறைக்க வடகிழக்கில் அதிக அளவில் பாமாயிலை உற்பத்தி செய்ய வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x