Published : 23 May 2025 10:09 PM
Last Updated : 23 May 2025 10:09 PM
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இயங்கும் இனிப்பகங்கள் ‘பாக்’ என பெயர் கொண்ட இனிப்புகளின் பெயரை மாற்றியுள்ளன. தேசத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், பாகிஸ்தான் குறியீட்டை தவிர்க்கும் வகையிலும் இந்த நகர்வை அங்கு செயல்படும் சிறியது முதல் பெரியது வரையிலான இனிப்பகங்கள் கையில் எடுத்துள்ளதாக தகவல்.
இதனால் மைசூர் பாக், மோத்தி பாக், ஆம் பாக், கோந்த் பாக், ஸ்வர்ண பஸம் பாக் போன்ற இனிப்புகளின் பெயர் மைசூர் ஸ்ரீ, மோத்தி ஸ்ரீ, ஆம் ஸ்ரீ, கோந்த் ஸ்ரீ, ஸ்வர்ண ஸ்ரீ என மாற்றப்பட்டுள்ளது.
“தேசப்பற்று எல்லையில் இருக்கும் மக்கள் மட்டுமல்லாது, ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் இருக்க வேண்டும். அதனால் இனிப்புகளின் இந்த பெயர் மாற்றத்தை எங்களது வாடிக்கையாளர்களும் வரவேற்றுள்ளனர்” என ஜெய்ப்பூரின் வைஷாலி நகர் பகுதியில் இனிப்பகம் வைத்துள்ள அஞ்சலி ஜெயின் கூறியுள்ளார்.
“இதன் மூலம் நாங்கள் ஒரு தெளிவான மெசேஜை சொல்லி உள்ளோம். அதாவது இந்தியாவுக்கு எதிராக புருவத்தை உயர்த்துபவர்களின் பெயர் அழிக்கப்படும். ஒவ்வொரு இந்தியரும் அவரவர் வழியில் அதற்கான பதிலடி கொடுப்பார்கள். இது எங்களது அடையாளத்தின் மூலம் நாங்கள் கொடுத்துள்ள பதிலடி” என பாம்பே மிஸ்தான் பந்தர் இனிப்பகத்தின் பொது மேலாளர் வினீத் திரிகா கூறியுள்ளார்.
“இனிப்புகளின் பெயரை மாற்றிய விஷயம் சாதாரணமாக தெரியலாம். ஆனால், இது கலாச்சார ரீதியாக கொடுப்பட்டுள்ள எதிர்வினை. நாட்டு மக்கள் பாதுகாப்பு படையின் பக்கம் நிற்பதை இது உறுதி செய்கிறது. இந்தியா ஒருபோதும் பயங்கரவாத தாக்குதலை மறக்காது மற்றும் மன்னிக்காது” என ரமேஷ் பாட்டியா என்ற தொழிலதிபர் இது குறித்து கருத்து கூறியுள்ளார்.
“மைசூர் பாக் இனி மைசூர் ஸ்ரீ. இது நம் ராணுவ வீரர்களுக்கு இனிப்பான சல்யூட். இது மிகவும் எளிமையான ஒன்று. அதே நேரத்தில் உணர்வுபூர்வமானது” என ஓய்வு பெற்ற ஆசிரியர் கவுஷிக் கூறியுள்ளார்.
கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை மூலம் இந்தியா பதிலடி கொடுத்தது. தொடர்ந்து எல்லை பகுதியில் பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலை இந்திய பாதுகாப்பு படை முறியடித்தது. போர் பதற்றம் ஏற்பட்ட சூழலில் போர் பதற்றம் என இரு நாடுகளும் அறிவித்தன. இந்த சூழலில் தற்போது ‘பாக்’ என பெயர் கொண்ட இனிப்புகளின் பெயர் ‘ஸ்ரீ’ என மாற்றப்பட்டுள்ளது. இது இந்தியா பாகிஸ்தானுக்கு கொடுத்துள்ள இனிப்பான பதிலடியாக பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT