Published : 23 May 2025 05:02 PM
Last Updated : 23 May 2025 05:02 PM
சென்னை: கடந்த 2024-25-ம் நிதியாண்டில் 1.06 லட்சம் சிறிய ரக சிலிண்டர் இணைப்புகளை வழங்கி, தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் தற்போது வீடுகளில் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களையும், வர்த்தகப் பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையுள்ள சிலிண்டர்களையும் விநியோகம் செய்து வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் வெளியூர் பயணம் செய்யும் போது எளிதாக கொண்டு செல்லும் வகையில், 10 மற்றும் 5 கிலோ எடை கொண்ட சிறிய வகை சிலிண்டர்களை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில், இந்த சிலிண்டர்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இது குறித்து, இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் கூறியது: “இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இண்டேன் சிலிண்டர்களை 1.34 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், ‘எக்ஸ்ட்ரா லைட்’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட சிறிய ரக சிலிண்டர்களை பொதுமக்கள் அதிகளவில் வாங்கி பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர்.
இதன்படி, கடந்த 2024-25-ம் ஆண்டில் 1.06 லட்சம் சிறிய ரக சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டு, அகில இந்திய அளவில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. 60 ஆயிரம் இணைப்புகளை வழங்கி கர்நாடகா 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த 1.06 லட்சம் இணைப்புகளில் 60 சதவீதம் பேர் புதிய வாடிக்கையாளர்கள் ஆவர். மேலும், இதுவரை 1.85 லட்சம் சிறிய ரக சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சிறிய ரக சிலிண்டர் இணைப்புகள் அதிகளவில் நகர்ப்புறங்களில் வழங்கப்பட்டுள்ளது.
இதில், சென்னை முதலிடத்திலும், கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.இந்த சிறிய ரக சிலிண்டர் இணைப்பு பெற ரூ.3 ஆயிரம் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். ஏற்கெனவே சிலிண்டர் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், இப்புதிய இணைப்பு பெற அவர்கள் ஏற்கெனவே செலுத்தியுள்ள வைப்புத் தொகை போக எஞ்சிய தொகையை செலுத்த வேண்டும். சிறிய ரக சிலிண்டர்கள் எடை குறைவாக உள்ளதால், கையாள்வதற்கு எளிதாக உள்ளது.
மேலும், தீ விபத்து ஏற்பட்டாலும் இந்த சிலிண்டர் வெடித்து சிதறாது. அதனால், இச்சிலிண்டர் பாதுகாப்பானது. இந்த சிறிய ரக சிலிண்டர் இணைப்பு பெறுமாறு எந்த வாடிக்கையாளர்களையும் எங்களது விநியோகஸ்தர்கள் நிர்ப்பந்தம் செய்வது கிடையாது. அதேசமயம், இந்த சிலிண்டரின் சிறப்பம்சங்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு விளக்குமாறு அறிவுறுத்தி உள்ளோம். மேலும், இந்த சிலிண்டர் இணைப்பு பெறும் வாடிக்கையாளர்கள் அரசு வழங்கும் மானியம் பெற தகுதி கிடையாது” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT