Published : 20 May 2025 04:47 PM
Last Updated : 20 May 2025 04:47 PM

ஒழுங்குமுறை அனுமதியை தாமதிப்பது தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை பாதிக்கும்: நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: ஒழுங்குமுறை அனுமதி வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் செயல்முறைகளில் குறைவான வெளிப்படைத்தன்மை ஆகியவை நிச்சயமற்றத் தன்மையை உருவாக்கி, தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (FTAs) சரியான நேரத்தில் முடிவடைவதை பாதிக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரித்துள்ளார்.

மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் தற்போது அமெரிக்காவில் அந்நாட்டு வர்த்தகத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும்வேளையில் நிதியமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்திய போட்டி ஆணையத்தின் (Competition Commission of India) 16-வது ஆண்டு விழாவில் பேசிய மத்திய நிதியமைச்சர், இந்தியாவின் சுதந்திரமான மற்றும் நியாயமான சந்தையின் முக்கியத்துவத்தையும், அது எவ்வாறு முழுமையான பொருளாதாரத்துக்கு உதவும் என்பதையும் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது: “ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்ட, வேகமான பொருளாதாரத்தில் ஒழுங்குமுறை அனுமதி வழங்குவதில் ஏற்படும் தாமதம் நிச்சயமற்ற தன்மைக்கு வழிவகுக்கும். வெளிநாடுகளுடன் நாம் சுதந்திர வர்த்தகத்துக்கான பேச்சுவார்த்தைகள் நடத்தி வரும் இந்த வேளையில், அவை வர்த்தக காலக்கெடுவை சீர்குலைக்கும், பரிவர்த்தனைகளுக்கான நோக்கத்தின் மதிப்பை அழித்து, பாதிப்பை ஏற்படுத்தும்.

கட்டுப்பாட்டு அதிகாரிகளின் திறன், சுறுசுறுப்பு மற்றும் ஆயத்தநிலை, முதலீட்டாளர்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. சரியான நேரத்துக்குள் தடையற்ற வர்த்த ஒப்பந்தங்களை நாம் முடிக்க முயற்சிக்கும்போது, ஒழுங்குமுறை கட்டமைப்பின் இந்த அம்சங்கள் தீவிரமான அர்த்தம் கொண்டவையாக மாறிவிடுகிறது.

எனவே, சிக்கல்கள் எழும் போதும், சிக்கல்களைத் தீர்க்க எடுத்துக்கொள்ளும் நேரம் அல்லது கட்டுப்பாட்டு அதிகாரிகளின் குறைவான வெளிப்படைத்தன்மை போன்றவை பேச்சுவார்த்தைகளை சிக்கலாக்கிவிடும். எனவே, ஒழுங்குமுறை கட்டமைப்புகள் கடுமையான மேற்பார்வைகளை கைகொள்ளும் அதேநேரத்தில், போட்டிகளை பாதிக்காத வகையில், தடையற்ற ஒப்புதல்களை எளிமையாக்குவதும் அவசியம்.

சந்தைகள் சிலருக்காக மட்டும் இல்லாமல், பலருக்காகவும் வேலை செய்யவேண்டும் என்பது மிகவும் முக்கியமான கொள்கையாகும். சுதந்திரமான மற்றும் நியாயமான சந்தைகள், வளங்களைக் குறிப்பிட்ட சிலர் மட்டுமே கைப்பற்றுவதையோ, அதிகமான தேர்வுகளையும், விலைகளையும் கட்டுப்படுத்துவதையோ தடுக்கிறது. போட்டிகள் நுகர்வோரின் குரலை உறுதி செய்கிறது, அதுதான் சாமானியர்களின் குரல்களை முக்கியமானதாக்குகிறது, அதைக் கேட்க வணிகர்களை நிர்பந்திக்கிறது” என்று நிர்மலா சீதாராமன் பேசினார்.

பல துறைகளில் ஒரு சிலர் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த கருத்துக்கள் குறிப்பிடத்தகுந்தவையாக இருக்கிறது.

உதாரணமாக, விமானப்போக்குவரத்து துறையில், இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள் இணைந்து சந்தைப் பங்குகளில் 85 - 90 சதவீதத்தை வைத்துள்ளன. தொலைத்தொடர்புத் துறையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் இணைந்து 77 - 80 சதவீதம் இந்தியச் சந்தைகளை கைவசம் வைத்துள்ளன. நாடு முழுவதும் உணவுத்துறையில் இருக்கும் மிகப்பெரிய நிறுவனங்களாக சோமாட்டோ மற்றும் ஸ்விகி மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x