Published : 20 May 2025 03:53 PM
Last Updated : 20 May 2025 03:53 PM
மஞ்சூர்: நீலகிரி மாவட்டத்தில் சமீப நாட்களாக பெய்த தொடர் மழையால், பசுந்தேயிலை வரத்து அதிகரித்துள்ளது. தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. ஊட்டி, குன்னூர், மஞ்சூர், பிக்கட்டி, கிண்ணக்கொரை, குந்தா, கைகாட்டி, மகாலிங்கா, இத்தலார், மேற்கு நாடு, நஞ்சநாடு உட்பட 15 கூட்டுறவு ஆலைகளும், ஏராளமான தனியார் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன.
நடப்பாண்டு தொடக்கத்தில் போதிய மழை பெய்யாததால் வறட்சி ஏற்பட்டு, தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டது. கூட்டுறவு மற்றும் தனியார் தேயிலை தொழிற் சாலைகளில் தேயிலைத் தூள் உற்பத்தி பல மடங்கு குறைந்தது. தொழிலாளர் கூலி, மின் கட்டணம், உற்பத்திச் செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு சில தனியார் தொழிற்சாலைகள், தேயிலை உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தின.
இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் தொடர்ந்து கன மழை பெய்தது. அதேவேளையில் ஓரளவுக்கு வெப்பமான காலநிலையும் இருந்ததால், தேயிலை உற்பத்தி அதிகரித்தது. இதனால் கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் பசுந்தேயிலை வரத்தும் அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் கிலோ வரை மட்டுமே பசுந்தேயிலை வரத்து காணப்பட்ட நிலையில், தற்போது நாளொன்றுக்கு 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் கிலோ வரை பசுந்தேயிலை வரத்து உள்ளதாக கூறப்படுகிறது. தொழிற்சாலைகளில் தினசரி தேயிலைத்தூள் உற்பத்தி போக மீதமுள்ள பசுந்தேயிலை பிற தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகிறது.
இதுகுறித்து தேயிலை விவசாயிகள் கூறும்போது, ‘‘நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக குந்தா பகுதியை சுற்றிலும் தேயிலைத் தோட்டங்களில் சிவப்பு சிலந்தி நோய் தாக்கியுள்ளது. இன்றளவும் சிவப்பு சிலந்தியின் தாக்கம் உள்ளது. சிவப்பு சிலந்தி நோயை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT