Last Updated : 14 May, 2025 05:43 PM

 

Published : 14 May 2025 05:43 PM
Last Updated : 14 May 2025 05:43 PM

உ.பி.யில் அமைகிறது இந்தியாவின் 6-வது செமிகண்டக்டர் ஆலை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் ஜெவாரில் நாட்டின் 6-வது செமிகண்டக்டர் ஆலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஹெச்சிஎல் மற்றும் ஃபாக்ஸ்கான் கூட்டு முயற்சியுடன் அமைக்கப்பட உள்ள இந்த ஆலை ஜெவார் விமானநிலையத்துக்கு அருகில் அமைய உள்ளது. இது 2027-ல் இருந்து இயங்கத் தொடங்கும்.

ஹார்ட்வேர் உருவாக்கம் மற்றும் உற்பத்தியில் நீண்ட கால வரலாறு கொண்டது ஹெச்சிஎல் நிறுவனம். ஃபாக்ஸ்கான், சர்வதேச அளவில் மிகப்பெரிய மின்பொருள் உற்பத்தி நிறுவனமாகும். இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து, யமுனா விரைவுச்சாலை தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் அல்லது YEIDA-வில் உள்ள ஜெவார் விமானநிலைத்துக்கு அருகில் செமிகண்டக்டர் ஆலையை அமைக்கவுள்ளது. இந்த சிப் உற்பத்தி நிறுவனம் சுமார் ரூ.37,000 கோடி முதலீட்டை ஈர்க்கும்.

நாட்டின் 6-வது செமிகண்டக்டர் ஆலையாக அமையவுள்ள இதற்கான ஒப்புதல் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டது.

கூட்டத்துக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “ஜெவாரில் அமைக்கப்படும் அலகு, மாதத்துக்கு 20,000 வேஃபர்கள் மற்றும் 3.6 கோடி சிப்கள் உற்பத்தி செய்யும் திறன்கொண்டதாக இருக்கும். ஜெவார் ஆலையில் தயாரிக்கப்படும் சிப்கள் மொபைல் போன்கள், லேப்டாப்கள், ஆட்டோ மொபைல்ஸ், கணினிகளில் பயன்படுத்தப்படும்.

மற்ற ஐந்து செமி கண்டக்டர் ஆலைகளுக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவைகள் இந்த ஆண்டின் இறுதியில் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆறு ஆலைகளுடன் மூலோபாய ரீதியாக செமி கண்டக்டர் தொழில்துறையை வளர்ப்பதற்கான பயணத்தில் இந்தியா முன்னேறி வருகிறது." என்றார்.

ஏற்கெனவே, குஜராத் மாநிலத்தில் சனந்த் மற்றும் தோலேரா ஆகிய 2 இடங்களிலும், அசாமில் மோரிகானிலும் என மொத்தம் 3 புதிய செமிகண்டக்டர் ஆலைகள் கட்டப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவும் செமி கண்டக்டர் துறையும்! இந்தியாவில் செமி கண்டக்டர் தொழில் இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளது. இதன் பரந்த திறன்களை பயன்படுத்திக்கொள்ள உள்ளூர் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் விரும்புகின்றன.

கரோனா பொதுமுடக்க காலத்தில் ஏற்பட்ட சிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், தேசிய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், செமி கண்டக்டர்களின் உள்நாட்டு உற்பத்தியின் முக்கியத்துவம் உணரப்பட்டது.

செமிகண்டக்டர் உற்பத்தி பயணத்தில் நாடு முன்னேறிச் செல்லும் போது, அதன் துணைத் தொழில்களும் நாட்டில் அதன் வசதிகளை மேம்படுத்தும் என்பதும் கணிக்கப்பட்டது. அப்லைடு மெட்டிரீயல்ஸ் மற்றும் லாம் ரிசர்ச் ஆகிய இரண்டு மிகப்பெரிய உதிரி பாக உற்பத்தியாளர்கள் தற்போது நாட்டில் கால் பதித்துள்ளனர்.

இந்தச் சூழலில் ஜெவாரில் அமைக்கப்படும் அலகு, மாதத்துக்கு 20,000 வேஃபர்கள் மற்றும் 3.6 கோடி சிப்கள் உற்பத்தி செய்யும் திறன்கொண்டதாக இருக்கும். ஜெவார் ஆலையில் தயாரிக்கப்படும் சிப்கள் மொபைல் போன்கள், லேப்டாப்கள், ஆட்டோ மொபைல்ஸ், கணினிகளில் பயன்படுத்தப்படும். இது இத்துறையில் தேசம் தன்னிறைவு பெற உதவியாக இருக்கும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x