Published : 26 Apr 2025 04:57 PM
Last Updated : 26 Apr 2025 04:57 PM

தமிழகத்தில் சிகரெட் லைட்டர் விற்பனை தடைக்கு நடவடிக்கை: பேரவையில் அமைச்சர் உறுதி

கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் சிகரெட் லைட்டர் விற்பனைக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில், அதிமுக எம்எல்ஏ கடம்பூர் ராஜூ கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியது: “தென்மாவட்டங்களில் விவசாயத்துக்கு அடுத்த நிலையில், தீப்பெட்டி தொழில் ஏழை பெண் தொழிளார்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் தொழிலாக உள்ளது. அந்த தொழிலுக்கு சிகரெட் லைட்டர் விற்பனை பெரும் சவாலாக உள்ளது.

தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் சார்பில் மனு அளித்ததின் பேரில், முதல்வர் ஸ்டாலினும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். ஆனால் உதிரி பாகங்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டது. முற்றிலுமாக தடை செய்யப்படவில்லை. அந்தமான் அரசு, சுற்றுச்சூழல் துறையின் கீழ் லைட்டர் விற்பனைக்கு தடை விதித்துள்ளது. அதுபோல் சுற்றுச்சூழல் துறை சார்பில் தமிழகத்தில் லைட்டரை தடை செய்ய வேண்டும்,” என்று அவர் பேசினார்.

இதற்கு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்து பேசியது:“தென் மாவட்டங்களில் கோவில்பட்டி, சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தீப்பெட்டி தொழில் பிரதான தொழிலாக ரூ.20-க்கு கீழ் லைட்டர் விற்கப்படுவதால் பெண் தொழிலாளர்கள் உள்பட, தீப்பெட்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது. லைட்டர் விற்பனையால் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு பிரச்சினை இருக்கிறது என்பதை அரசு அறியும்.

தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சிகரெட் லைட்டர்களும், பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டு, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடியவை தான். இதன் கீழ் லைட்டர் விற்பனைக்கு தடை செய்வது குறித்து மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் சுற்றுச்சூழல் துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை, அரசு பரிசீலனையில் உள்ளது. இது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அமைச்சர் பதில் அளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x