Published : 22 Apr 2025 06:40 AM
Last Updated : 22 Apr 2025 06:40 AM
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வரவால் கடின உழைப்பாளிகளுக்கான தேவை எதிர்காலத்தில் இருப்பதற்கான வாய்ப்பில்லை என்று போர்ட்போலியோ-மேலாண்மை சேவை நிறுவனமான மார்செல்லஸ் இன்வெஸ்ட்மெண்ட் மேனேஜர்ஸ் நிறுவனரும், சந்தை நிபுணருமான சவுரப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: இந்த தசாப்தத்தில் இந்தியா ஒரு புதிய பொருளாதார கட்டத்தில் நுழைந்துள்ளது. அங்கு சம்பளம் பெறும் நடுத்தர வர்க்கத்தினருக்கான வேலைவாய்ப்பு படிப்படியாக அழிவை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எங்களின் பெற்றோர்கள் ஒரு நிறுவனத்தில் 30 ஆண்டுகள் பணியாற்றிய பழைய மாடல் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தை கட்டியெழுப்பிய வேலை கட்டுமானம் இனி நிலையானதாக இருக்காது.
கடின உழைப்பாளிகளின் வர்க்கத்துக்கு மாற்றாக இனி ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களின் பயன்பாடு பரவலாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒயிட் காலர் பணியாளர்கள் செய்ய வேண்டியவற்றில் பெரும்பாலானவை இப்போது ஏஐ தொழில்நுட்பத்தால் செய்து முடிக்கப்படுகிறது. கூகுள் அதன் கோடிங் பணியில் மூன்றில் ஒரு பகுதியை ஏற்கெனவே ஏஐ-யால் செய்து வருவதாக கூறியுள்ளது. இதேநிலைதான் இந்திய தொழில்நுட்பம், ஊடகம் மற்றும் நிதி ஆகியவற்றுக்கும்.
தொழில்நுட்பத்தின் விரைவான முன்னேற்றம் காரணமாக நடுத்தர அளவிலான தொழில்வாய்ப்புகள் தற்போது தனது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கான நெருக்கடிகளை அதிக அளவில் சந்தித்து வருகின்றன.
சம்பளம் வாங்கும் நடுத்தர வர்த்தகத்தினரின் இடையே இருள், அழிவு நிலை சூழ்ந்துள்ளபோதிலும், அரசு குறிப்பிட்ட சில சாதனைகளை சப்தமில்லாமல் செய்து முடித்துள்ளது. அதன்படி, ஜன்தன், ஆதார், மொபைல் ஆகியவற்றை ஒன்றாக இணைத்துள்ளது. இது வரவிருக்கும் தொழில்முனைவோர் அலைக்கு சிறப்பான களத்தை அமைத்து கொடுக்கும்.
கார்ப்பரேட் தொழில்களுக்கு காட்டிய புத்திசாலித்தனம் மற்றும் மன உறுதியை தொழில்முனைவோராக நாம் பயன்படுத்தினால் செழிப்பின் புதிய எந்திரமாக மாற முடியும். ஸ்திரத்தன்மை மற்றும் சம்பளத்துடன் தொடர்புடைய தத்துவங்ளை இந்திய சமூகம் மாற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு சவுரப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பொருளாதார நிபுணர் சோம வள்ளியப்பன் கூறுகையில், “ ஓய்வு பெறும் வரை ஒரே நிறுவனத்தில் பணி செய்வது என்கிற நிலை மாறி பல ஆண்டுகள் ஆகின்றன. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தவிர 60, 70 விழுக்காடு நிறுவனங்களில் இந்த நடைமுறை இல்லை.
செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி மனிதர்களால் செய்யப்படும் பல்வேறு வேலைகளை மிகக் குறைந்த நேரத்தில், குறைந்த செலவில் சிறப்பாக செய்ய முடியும். முன்பு கம்ப்யூட்டர் வந்தபோதும் வங்கிகள் ரயில்வேகளில் ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாகிவிடும் என்றார்கள். மக்கள் தொகை பெருக்கம் பொருளாதார வளர்ச்சி ஆகிய இரண்டும் இருக்கும் வரை புதிய புதிய வேலைவாய்ப்புகள் உருவாகிக் கொண்டேதான் இருக்கும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT