Published : 21 Apr 2025 09:45 AM
Last Updated : 21 Apr 2025 09:45 AM

தங்கம் விலை கிராம் ரூ.9000-ஐ கடந்தது

சென்னை: தங்கம் விலை மற்றொரு புதிய உச்சமாக இன்று (ஏப்.21) ஒரு கிராம் ரூ.9000-ஐ கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, இஸ்ரேல், பாலஸ்தீன போர் எதிரொலியாக அதிகரித்தது. இதைத் தொடர்ந்து ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது. இந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டது.

இந்நிலையில் இன்று (ஏப்.21) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,015-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,120-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.111-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,11,000-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது தொடர்பாக தங்க நகை வியாபாரிகள் கூறியதாவது: அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக போரில் அனைத்து நாடுகளும் சிக்கிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதலே தங்கத்தின் விலை அதிகரிக்க தொடங்கிவிட்டது.

தற்போது வரை வர்த்தக போர் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இதனால் பங்குச்சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. அடுத்தடுத்த வாரங்களில் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பில்லை. விரைவில் ஒரு பவுன் ரூ.80 ஆயிரத்தை தொடும்.

அதேநேரம், இருநாடுகளுக்கும் இடையேயான பரஸ்பர வரி விதிப்பு குறைக்கப்படாத பட்சத்தில் எண்ணி பார்க்க முடியாத அளவுக்கு விலை அதிகரிக்கக் கூடும். ஆண்டு இறுதிக்குள் ரூ.1 லட்சத்தை அடையவும் வாய்ப்பிருக்கிறது. தங்கம் உற்பத்தி எவ்வளவு அதிகரித்தாலும் விலை குறைய வாய்ப்பில்லை. தங்கத்தின் மீதான நம்பிக்கையில் மக்கள் நாணயத்தில் அதிக முதலீடு செய்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x