Published : 18 Apr 2025 06:05 AM
Last Updated : 18 Apr 2025 06:05 AM

தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை: மூன்றரை மாதத்தில் ரூ.14,160 உயர்வு

சென்னை: சென்னையில் தங்கம் விலை ரூ.72 ஆயிரத்தை நெருங்கியிருப்பது நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

கடந்த 2023-ம் ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, இஸ்ரேல், பாலஸ்தீன போர் எதிரொலியாக அதிகரித்தது. இதைத் தொடர்ந்து ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது. இந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.840 உயர்ந்து, ரூ.71,360-க்கும், கிராமுக்கு ரூ.105 அதிகரித்து, ரூ.8,920-க்கும் விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.77,840-க்கு விற்பனையானது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.110-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது இல்லத்தரசிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. நடப்பாண்டு தொடங்கி மூன்றரை மாதத்தில் மட்டும் பவுனுக்கு ரூ.14,160 உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக தங்க நகை வியாபாரிகள் கூறியதாவது: அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக போரில் அனைத்து நாடுகளும் சிக்கிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதலே தங்கத்தின் விலை அதிகரிக்க தொடங்கிவிட்டது.

தற்போது வரை வர்த்தக போர் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இதனால் பங்குச்சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. அடுத்தடுத்த வாரங்களில் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பில்லை. விரைவில் ஒரு பவுன் ரூ.80 ஆயிரத்தை தொடும்.

அதேநேரம், இருநாடுகளுக்கும் இடையேயான பரஸ்பர வரி விதிப்பு குறைக்கப்படாத பட்சத்தில் எண்ணி பார்க்க முடியாத அளவுக்கு விலை அதிகரிக்கக் கூடும். ஆண்டு இறுதிக்குள் ரூ.1 லட்சத்தை அடையவும் வாய்ப்பிருக்கிறது. தங்கம் உற்பத்தி எவ்வளவு அதிகரித்தாலும் விலை குறைய வாய்ப்பில்லை. தங்கத்தின் மீதான நம்பிக்கையில் மக்கள் நாணயத்தில் அதிக முதலீடு செய்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x