Published : 01 Apr 2025 09:59 AM
Last Updated : 01 Apr 2025 09:59 AM
சென்னை: தங்கம் விலை ஒரு பவுன் ரூ.68 ஆயிரத்தை கடந்து மற்றொரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8510-க்கும், பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு பவுன் ரூ.68,080-க்கும் விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.113-க்கு விற்பனையாகிறது.
பவுன் ரூ.80 ஆயிரம் வரை உயரலாம்... - தங்கம் விலை அன்றாடம் பல புதிய உச்சங்களைத் தொட்டு வரும் நிலையில், “நாளை முதல் (ஏப்.2) அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த இறக்குமதி வரி அமலுக்கு வருவதால் வர்த்தகப் போர் வலுத்துள்ளது. அதனால் தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்துள்ளது. இதுவே தங்கம் விலை உயரக் காரணம் என்று சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வர்த்தகப் போரின் காரணமாக சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு ஆதரவாக உள்ள நாடுகள் தங்கள் கையிருப்பில் உள்ள அமெரிக்க டாலர்களை விற்றுவிட்டு, தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன. இதனால், சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. அத்துடன் அமெரிக்க டாலரின் மதிப்பும் குறைந்து வருகிறது.
இத்தகைய காரணங்களால் தங்கம் விலை இன்னும் பெரிய உச்சத்தை காணும் சூழல் உள்ளது. பவுன் ரூ.80,000 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT