Published : 27 Mar 2025 06:29 PM
Last Updated : 27 Mar 2025 06:29 PM
அவிநாசி: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலி உயர்வு பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வலியுறுத்தி, அவிநாசியில் வரும் ஏப்.2-ம் தேதி விசைத்தறியாளர்கள் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இன்று (மார்ச் 27) அறிவித்துள்ளனர்.
கோவை - திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டம் அவிநாசி அருகே தெக்கலூரில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு அவிநாசி சங்கத் தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். சோமனூர் சங்கத் தலைவர் பூபதி, தெக்கலூர் சங்க செயாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கடந்த, 2022-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்த கூலியில் இருந்து குறைக்கப்பட்ட கூலியை முழுமையாக வழங்க வேண்டும். இனி ஒப்பந்தப்படி கூலியை குறைக்காமல் வழங்க வேண்டும்.
சட்ட பாதுகாப்புடன் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்பட, ஜவுளி உற்பத்தியாளர்களை, மாவட்ட நிர்வாகம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆண்டுக்கு, 6 சதவீதம் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, விசைத்தறியாளர்கள் கடந்த 19-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், உரிய தீர்வு காண வலியுறுத்தி வரும் ஏப்.2-ம் தேதி, கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த விசைத்தறியாளர்களின் ஊதிய பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி, திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தெக்கலூர், சோமனூர், அவிநாசி, புதுப்பாளையம், பெருமாநல்லூர், கண்ணம்பாளையம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த கூட்டமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT