Published : 27 Mar 2025 09:05 AM
Last Updated : 27 Mar 2025 09:05 AM
மும்பை: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் புதிய வரி விதிப்பு எச்சரிக்கையால் வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை ரிலையன்ஸ் நிறுவனம் நிறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் குற்றவாளிகளும், போதைப்பொருட்களும் சட்டவிரோதமாக ஊடுருவ தென் அமெரிக்க நாடான வெனிசுலா ஆதரவளிப்பதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். இதனால், வெனிசுலா மீது கூடுதல் வரிவிதிக்கப்படும் என அமெரிக்கா ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது வரும் ஏப்ரல் 2-ம் தேதி முதல் 25% கூடுதல் வரி விதிக்கப்படும் என 2 தினங்களுக்கு முன்பு ட்ரம்ப் அறிவித்தார்.
தற்போது இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், வெனிசுலா நாட்டிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில் ட்ரம்பின் புதிய வரி விதிப்பு அறிவிப்பால், வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை ரிலையன்ஸ் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம், ஏற்கெனவே வெனிசுலாவிலிருந்து புறப்பட்ட சரக்கு கப்பலில் உள்ள கச்சா எண்ணெயை மட்டும் ரிலையன்ஸ் பெற்றுக் கொள்ளும் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT