Published : 22 Mar 2025 08:22 PM
Last Updated : 22 Mar 2025 08:22 PM
பெங்களூரு: ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் இணை ஸ்பான்ஸராக ‘நத்திங்’ தொழில்நுட்ப நிறுவனம் இணைந்துள்ளது. இந்திய சந்தையில் தங்களது பிராண்டினை பிரபலப்படுத்தும் வகையில் இந்த நகர்வை அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
ஐபிஎல் 2025 சீசன் இன்று (மார்ச் 22) தொடங்கி உள்ளது. இதில் பங்கேற்று விளையாடும் 10 அணிகளில் ஒன்றாக உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. அந்த அணியை இந்த சீசனில் ரஜத் பட்டிதார் வழிநடத்துகிறார். இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் ஆர்சிபி பலப்பரீட்சை மேற்கொண்டுள்ளது.
இந்தச் சூழலில் இந்திய சந்தையில் தங்களது பிராண்டினை பிரபலப்படுத்தும் வகையில் ஆர்சிபி அணியின் இணை ஸ்பான்ஸராக நத்திங் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்துள்ளது. இந்தியாவில் அந்த நிறுவனத்தின் சந்தை வாய்ப்பு வளர்ச்சி கண்டு வருவது குறிப்பிடத்தக்கது. நத்திங் நிறுவன லோகோ ஆர்சிபி அணி வீரர்களின் ஜெர்சி, கிட் பேக் போன்றவற்றில் இடம்பெற்றிருக்கும்.
“கிரிக்கெட் விளையாட்டை இந்தியாவில் உள்ள மக்கள் அதிகம் விரும்புகின்றனர். அந்த விளையாட்டை மக்கள் ஆழமாக நேசிக்கின்றனர். எங்கள் நத்திங் நிறுவனமும் அதன் தயாரிப்புகளின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான பயன்பாட்டு அனுபவத்தை வழங்க விரும்புகிறது. அதை கருத்தில் கொண்டு ஆர்சிபி அணியுடன் கூட்டு சேர்ந்துள்ளோம்” என நத்திங் நிறுவன இணை நிறுவனர் அகிஸ் கூறியுள்ளார்.
நத்திங் நிறுவனம்: லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது நத்திங் நிறுவனம். தொழில்நுட்ப சாதன உற்பத்தி நிறுவனமான நத்திங், ஹெட்செட் விற்பனை மூலம் சந்தையில் களம் கண்டது. தொடர்ந்து ஸ்மார்ட்போன் விற்பனையை 2022-ல் தொடங்கியது. இது ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அந்நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான கார்ல் பெய் (Carl Pei) தான் இந்த வரவேற்புக்கு காரணம். இவர் ஒன்பிளஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக செயல்பட்டவர். பின்னர் கடந்த 2021-ல் நத்திங் நிறுவனத்தை தொடங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT