Published : 06 Mar 2025 01:18 AM
Last Updated : 06 Mar 2025 01:18 AM
இந்தியாவில் 100 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்திருக்கும் கோடீஸ்வரர்கள் 191 பேராக உயர்ந்துள்ளனர் என்று நைட் ஃபிராங்க் அமைப்பு புள்ளிவிவரத்தில் தெரியவந்துள்ளது.
உலகளாவிய கோடீஸ்வரர்கள், சொத்து விவரங்களை வெளியிடும் நைட் ஃபிராங்க் அமைப்பு அண்மையில், 2025-ம் ஆண்டுக்கான சொத்து அறிக்கையை வெளியிட்டது. இதில் இந்தியாவில் 191 பேர் 100 கோடிக்கும் அதிகமாக சொத்துகளை வைத்துள்ளனர் என்றும், 2024-ல் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 6 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நைட் ஃபிராங்க் அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் அதிக சொத்து மதிப்புள்ள நபர்கள் (எச்என்டபிள்யூஐ) அதிகரித்துள்ளனர். கடந்த 2023-ம் ஆண்டில் இந்தியாவில் 1 கோடி அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.87 கோடி) சொத்து மதிப்புள்ளவர்களின் எண்ணிக்கை 80,686 ஆக இருந்தது. இது 2024-ல் 85,698-ஆக அதிகரித்துள்ளது.
இது 6 சதவீத உயர்வு ஆகும். மேலும், இந்தியாவில் 191 பேர் ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துகளை வைத்துள்ள கோடீஸ்வரர்களாக உள்ளனர். வரும் 2028-ம் ஆண்டுக்குள் 93,753 பேர் சுமார் ரூ.87 கோடி சொத்து மதிப்புள்ளவர்களாக இருப்பர்.
இந்தியாவில் அதிக சொத்து மதிப்புள்ள நபர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வருவதற்கு, நாட்டின் வலுவான நீண்டகால பொருளாதார வளர்ச்சி, அதிகரித்து வரும் முதலீட்டு வாய்ப்புகள், வளர்ந்து வரும் ஆடம்பர சந்தை ஆகியவை காரணிகளாக உள்ளன. உலகளாவிய சொத்து உருவாக்கத்தில், இந்தியா ஒரு முக்கிய நாடாக மாறுவதற்கு இவை உதவுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT