Last Updated : 04 Mar, 2025 04:57 PM

 

Published : 04 Mar 2025 04:57 PM
Last Updated : 04 Mar 2025 04:57 PM

வாரம் 5 நாள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளுடன் மத்திய அரசுக்கு வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு கடிதம்

பிரதிநிதித்துவப்படம்

சென்னை: ‘வங்கிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், வங்கிகளுக்கு வாரம் 5 நாட்கள் வேலை நாட்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய நிதித் துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய நிதித் துறை செயலாளர் நாகராஜுக்கு அனுப்பி உள்ள கடிதத்தின் விவரம்: நாட்டின் நிதி கட்டமைப்புக்கு முதுகெலும்பாக வங்கிகள் திகழ்கின்றன. அத்துடன், அரசின் நலஉதவித் திட்டங்களை செயல்படுத்துதல், நிதி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பொருளாதார வளர்ச்சிக்கு வங்கிகள் உதவுகின்றன. ஆனால், வங்கிகளில் ஊழியர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பணி ஓய்வு, விருப்ப ஓய்வு மற்றும் ஊழியர்களை தேர்வு செய்யாது உள்ளிட்ட காரணங்களால், பொதுத் துறை வங்கிகளில் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

கடந்த 2013-ம் ஆண்டு வங்கிகளில் கிளார்க் பணியாளர்கள் 3.98 லட்சமாக இருந்தனர். இது, தற்போது 2.46 லட்சமாக குறைந்து விட்டது. அதே போல், கடைநிலை ஊழியர்களின் எண்ணிக்கை 1.53 லட்சத்தில் இருந்து 94 ஆயிரமாக குறைந்து விட்டது. அதேசமயம், தனியார் வங்கிகளில் 2014-ம் ஆண்டு 2.25 லட்சமாக இருந்த ஊழியர்களின் எண்ணிக்கை 2024-ம் ஆண்டு 7.96 லட்சமாக அதிகரித்துள்ளது. ஊழியர் பற்றாக்குறை காரணமாக வங்கிகளில் வேலைப்பளு மற்றும் தவறுகள் அதிகரித்துள்ளதோடு, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையும் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வங்கிகளில் உள்ளி காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும்.

மேலும், வங்கிகளில் தற்காலிக அடிப்படையில் வேலை செய்யும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வாரத்துக்கு 5 நாட்கள் வங்கிகள் வேலை நாட்களாக அறிவித்து செயல்படுத்த வேண்டும். மேலும், வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது வாடிக்கையாளர்கள் தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x