Published : 01 Mar 2025 10:20 PM
Last Updated : 01 Mar 2025 10:20 PM
கோவை: மேட்டுப்பாளையத்தில் தேவை அதிகரிப்பால், செண்டு மல்லி வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள வெள்ளியங்காடு, தாயனூர், தேரம்பாளையம், சம்பரவள்ளி, தோலம்பாளையம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் சம்பங்கி, மல்லிகை, செண்டு மல்லி, கோழிக்கொண்டை போன்ற பூக்கள், பல நூறு ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இங்கு சாகுபடி செய்யப்படும் மலர்களை பறித்து மார்க்கெட்டுகளில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இதில், முக்கிய சாகுபடியாக செண்டு மல்லி உள்ளது.
தற்போது முகூர்த்த நாட்கள், கோயில் பயன்பாட்டுக்கு தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால் செண்டு மல்லி சாகுபடியில் விவசாயிகளால் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் பகுதி விவசாயிகள் கூறும்போது, “செண்டு மல்லி சாகுபடிக்கு அதிக தண்ணீர் தேவை இருக்காது. பயிரிட்ட மூன்று மாதங்களில் பூக்கத் தொடங்கும். தேவை அதிகரிப்பால் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் செண்டு மல்லி சாகுபடியில் விவசாயிகள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு சாகுபடி செய்யப்படும் செண்டு மல்லி பூக்கள், மலர்ச் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
முகூர்த்தம் மற்றும் விசேஷ காலங்களில் ஒரு கிலோ செண்டுமல்லி ரூ.50 முதல் ரூ.70 வரையிலும், பிற நாட்களில் ரூ.30 முதல் ரூ.40 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT