Last Updated : 11 Feb, 2025 04:34 PM

 

Published : 11 Feb 2025 04:34 PM
Last Updated : 11 Feb 2025 04:34 PM

நீர் மின்னுற்பத்தி 2024-25: மத்திய மின்சார ஆணையம் நிர்ணயித்த இலக்கை அடைந்த தமிழக மின்வாரியம்!

சென்னை: மத்திய மின்சார ஆணையம் 2024-25-ம் ஆண்டில் நிர்ணயித்த மின்னுற்பத்தி இலக்கை விட அதிக அளவு நீர் மின்னுற்பத்தி செய்து தமிழக மின்வாரியம் இலக்கை அடைந்துள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, “தமிழகத்தில் நீர் மின்னுற்பத்தி செய்வதற்காக 2,321.90 மெகாவாட் திறனில் 47 நீர் மின்னுற்பத்தி நிலையங்கள் உள்ளன. ஈரோடு, கடம்பாறை, குந்தா மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இந்த மின்நிலையங்கள் அமைந்துள்ளன. மின்னுற்பத்தியில் இந்த நீர்மின் நிலையங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தினமும் ஒரு கோடி யூனிட் என்ற அளவில் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது.

நீர்மின் நிலையங்களில் மின்னுற்பத்தி செய்ய மத்திய மின்சார ஆணையம் ஆண்டுதோறும் இலக்கு நிர்ணயித்து வருகிறது. அதன்படி, 2024-25ம் ஆண்டுக்கு 4,220 மில்லியன் யூனிட் மின்னுற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்தது. நிர்ணயிக்கப்பட்ட இந்த இலக்கை விட கூடுதலாக 4,231.351 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து இலக்கை அடைந்துள்ளோம்.

ஆனால், கடந்த ஆண்டு 3,118.736 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து இலக்கை எட்ட முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், இந்த ஆண்டு இலக்கை எட்டியுள்ளோம். அத்துடன், வரும் மார்ச் மாதத்துக்குள் 5,500 மில்லியன் யூனிட் மின்னுற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து அணைகளிலும் போதிய அளவு நீர் உள்ளதால், இந்த இலக்கை எட்ட முடிந்தது,” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x