Published : 01 Feb 2025 03:55 PM
Last Updated : 01 Feb 2025 03:55 PM
புதுடெல்லி: புற்றுநோய், அரிய வகை நோய்கள் மற்றும் இதர நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய 36 உயிர் காக்கும் மருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
2025-26 நிதியாண்டுக்கான ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், “உயிர் காக்கும் 36 மருந்துகளுக்கான சுங்க வரி முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. இவை புற்றுநோய், அரிய வகை நோய்களை குணப்படுத்துவதற்கான அத்தியாவசிய மருந்துகளாகும். 5% சலுகை அளிக்கப்படும் சுங்க வரிப் பட்டியலில் 6 உயிர்காக்கும் மருந்துகள் சேர்க்கப்படும்.இந்த மருந்துகளை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் மொத்த மருந்துகளுக்கு முழு விலக்கு மற்றும் சலுகை வரி பொருந்தும்.
மின்னணு வாகன பேட்டரி உற்பத்திக்கான 35 கூடுதல் மூலதன பொருட்களையும், மொபைல் போன் பேட்டரி உற்பத்திக்கான 28 கூடுதல் மூலதன பொருட்களையும் விலக்கு அளிக்கப்பட்ட மூலதனப் பொருட்களின் பட்டியலில் சேர்க்கப்படும். இது மொபைல் போன்கள் மற்றும் மின்சார வாகனங்கள் இரண்டிற்கும் லித்தியம்-அயன் பேட்டரியின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும்.
கோபால்ட் பவுடர் மற்றும் கழிவுகள், லித்தியம் அயன் பேட்டரியின் கழிவுகள், ஈயம், துத்தநாகம் மற்றும் மேலும் 12 முக்கியமான தாதுக்கள் மீதான அடிப்படை சுங்க வரி முழுமையாக நீக்கப்படும். இது இந்தியாவில் உற்பத்திக்கான அவர்களின் இருப்பை உறுதிப்படுத்தவும், நமது இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை மேம்படுத்தவும் உதவும். 2024 ஜூலை பட்ஜெட்டில் அடிப்படை சுங்க வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்ட 25 முக்கியமான தாதுக்களுடன் இவை கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.
ஊட்டச்சத்து உறுதுணை: மேலும், “திறன் அங்கன்வாடி மற்றும் ஊட்டச்சத்து 2.0 திட்டத்துக்கு மேம்பட்ட ஊட்டச்சத்து ஆதரவை அதிகரிக்க மத்திய பட்ஜெட் 2024-25 உத்தேசித்துள்ளது. இந்தத் திட்டம் 8 கோடிக்கும் அதிகமான குழந்தைகள், 1 கோடி கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து ஆதரவை வழங்குகிறது. மேலும், வடகிழக்குப் பிராந்தியம் மற்றும் முன்னேற விரும்பும் மாநிலங்களின்(ஆஷ்பைரேஷனல் மாவட்டங்கள்) சுமார் 20 லட்சம் வளரிளம் பெண்களுக்கும் ஊட்டச்சத்து கிடைக்க இது வகை செய்கிறது.
அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் பகல் நேர புற்றுநோய் மையங்கள் அமைக்கப்படும். 2025-26-ல் அத்தகைய 200 மையங்கள் அமைக்கப்படும். மருத்துவக் கல்லூரிகளில் 10,000 கூடுதல் இடங்கள் அடுத்த ஆண்டில் உருவாக்கப்படும். இது தொடர்ச்சியாக அடுத்த 5 ஆண்டுகளில் 75,000 கூடுதல் இடங்களை அதிகரிக்கும் மத்திய அரசின் இலக்கை நோக்கமாக கொண்டுள்ளது” என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT