Published : 29 Jan 2025 06:24 AM
Last Updated : 29 Jan 2025 06:24 AM
சென்னை: கோயம்பேடு சந்தையில் தேங்காய் விலை உயர்ந்துள்ளது. சில்லறை விலையும் அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த மாதம் ஒரு கிலோ தேங்காய் ரூ.40 முதல் ரூ.55 வரை விற்பனையானது. நேற்று ரூ.65 வரை விற்றது. சில்லறை விலையில் ஒரு கிலோ தேங்காய் அதிகபட்சமாக ரூ.90 வரை விற்பனையானது.
இதுகுறித்து தேங்காய் வியாபாரிகள் கூறும்போது, ‘‘கனமழை மற்றும் நோய் காரணமாக உற்பத்தி பாதித்து தேங்காய் வரத்து சுமார் 300 டன் வரை குறைந்துள்ளது. இதுதான் தேங்காய் விலை உயர்வுக்கு காரணம்’’ என்று தெரிவித்தனர்.
தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்தியாவில் தேங்காய் உற்பத்தியில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் கர்நாடகாவும், 3-வது இடத்தில் கேரளாவும் இருக்கின்றன. தமிழகத்தில் கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தஞ்சாவூர், தேனி, சேலம் மாவட்டங்களில் தென்னை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
மாநிலத்தில் தென்னை சாகுபடியும், தேங்காய் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. தென்னை சாகுபடி பரப்பளவு 4 லட்சத்து 70 ஆயிரம் எக்டேரில் இருந்து 4 லட்சத்து 82 ஆயிரம் எக்டேராக அதிகரித்துள்ளது.
ஒரு எக்டேருக்கு சராசரியாக 13 ஆயிரம் தேங்காய் கிடைக்கிறது. தேங்காய் மொத்த சந்தையில் நேற்று ஒரு கிலோ ரூ.45 முதல் 50 வரைதான் விற்பனையானது. சென்னையில் தேங்காய் விலை உயர்வுக்கு போக்குவரத்து செலவு அதிகமானதே காரணமாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT