Published : 27 Jan 2025 08:35 PM
Last Updated : 27 Jan 2025 08:35 PM
சென்னை: சோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பொறுப்பில் இருந்து ஸ்ரீதர் வேம்பு விலகியுள்ளார். ஆய்வுகளில் கவனம் செலுத்த நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி என்ற புதிய பொறுப்பை ஏற்பதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று முதல் புதிய அத்தியாயம் தொடங்குகிறது. செயற்கை நுண்ணறிவு துறையில் ஏற்பட்டுள்ள அண்மைக்கால மேம்பாடுகள் உள்ளிட்ட நம்மை எதிர்நோக்கியுள்ள பல்வேறு சவால்கள் மற்றும் வாய்ப்புகளை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆய்வு மற்றும் மேம்பாட்டு பணிகள், என்னுடைய தனிப்பட்ட கிராமப்புற வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்த இது ஏற்றதாக இருக்கும்.
சோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகி, ஆய்வுகளில் கவனம் செலுத்த முதன்மை விஞ்ஞானி என்ற புதிய பொறுப்பை ஏற்கிறேன். இணை நிறுவனர் சைலேஷ் குமார் தேவே நமது குழுமத்தின் புதிய சிஇஓ-வாக பதவியேற்கிறார். மற்றொரு இணை நிறுவனரான டோனி தாமஸ் சோஹோ நிறுவனத்தின் அமெரிக்க செயல்பாடுகளை கவனித்துக் கொள்வார். ராஜேஷ் கணேசன் மற்றும் மணி வேம்பு ஆகியோர் சோஹோ.காம் பிரிவுக்கான பொறுப்பை கவனித்துக் கொள்வார்கள்.
ஆய்வு மற்றும் மேம்பாடு சவால்களை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதைப் பொருத்தே நம்முடைய நிறுனத்தின் எதிர்காலம் இருக்கிறது. எனவே, புதிய பொறுப்பை ஆற்றலோடும், உற்சாகத்தோடும் எதிர்நோக்கியுள்ளேன். தொழில்நுடப் பணிகளுக்கு மீண்டும் திரும்புவது மகிழ்ச்சியளிக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT