Published : 20 Jan 2025 06:34 PM
Last Updated : 20 Jan 2025 06:34 PM

திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு ரூ.7 குறைந்தது!

திருப்பூர்: திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு ரூ.7 குறைந்ததால் தொழில் துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

திருப்பூரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்படுகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்ப, நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரித்து வருவது வழக்கம்.

நூல் விலை மற்றும் மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஜன. மாதத்துக்கான பிற்பகுதி 15 நாட்களுக்கான நூல் விலையை நூற்பாலைகள் இன்று (ஜன. 20) அறிவித்தன. இதில் நூல் விலை கிலோவுக்கு ரூ.7 குறைந்தது. இதனால் தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிலோவுக்கு: 10-ம் நம்பர் கோம்டு நூல் ரூ.175, 16-ம் நம்பர் ரூ.185, 20-ம் நம்பர் கோம்டு நூல் ரூ.243, 24-ம் நம்பர் ரூ.255, 30-ம் நம்பர் ரூ.265, 34-ம் நம்பர் ரூ.283, 40-ம் நம்பர் ரூ.303, 20-ம் நம்பர் செமி கோம்டு ரூ.240, 24-ம் நம்பர் ரூ. 250, 30-ம் நம்பர் ரூ.260, 34-ம் நம்பர் ரூ. 273, 40-ம் நம்பர் ரூ.293-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் தொழில்துறையினர் கூறும்போது, “தற்போது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகளவு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் ஆடை தயாரிப்பு மீண்டும் திருப்பூரில் சுறுசுறுப்படைந்துள்ளது. பின்னலாடைத்துறையில் வேலை அதிகரித்துள்ள நிலையில், நூற்பாலைகள் நூல் விலையை கிலோவுக்கு மேலும் ரூ.7 குறைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x