Published : 30 Apr 2024 06:13 AM
Last Updated : 30 Apr 2024 06:13 AM

நாகை - இலங்கை இடையே மீண்டும் மே 13 முதல் கப்பல் போக்குவரத்து

நாகப்பட்டினம்: நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கடந்த ஆண்டு அக்.14-ம் தேதி கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஆனால், புயல், மழை காரணமாக அக்.20-ல் கப்பல் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், மே 13-ம் தேதி நாகை துறைமுகத்தில் இருந்து மீண்டும் இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது. ஏற்கெனவே ‘செரியாபாணி’ என்ற கப்பல் இயக்கப்பட்ட நிலையில், தற்போது 'சிவகங்கை' என்ற கப்பல் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து கப்பல் நிறுவன நிர்வாக இயக்குநர் நிரஞ்சன் கூறும்போது, பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள 'சிவகங்கை' கப்பலில் 150 இருக்கைகள் உள்ளன. கீழ்தளத்தில் உள்ள இருக்கைகளில் பயணிக்க ரூ.5,000, மேல்தளத்தில் உள்ள சிறப்பு வகுப்பில் பயணிக்க ரூ.7,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அந்தமானில் தயாராகியுள்ள இந்தக் கப்பல் மே 10-ம் தேதி நாகை துறைமுகம் வருகிறது. இதில் பயணிப்பதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இதில் பயணிக்க அதிகம் பேர் ஆர்வமாக முன்பதிவு செய்து வருகின்றனர் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x