Published : 05 Sep 2025 06:43 AM
Last Updated : 05 Sep 2025 06:43 AM
சென்னை: வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், வாசிப்புத் திருவிழா எனும் நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ முன்னெடுத்துள்ளதுபுத்தக வாசிப்பை இளைய தலைமுறையினருடன் இணைந்து கொண்டாடும் இந்நிகழ்வு காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் உள்ள தொண்டை மண்டல ஆதி சைவ வேளாளர் சமுதாயக் கூட அரங்கில் நாளை (செப். 6) மாலை 3.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்நிகழ்வை, ஈவா ஸ்டாலின் ஐஏஎஸ் அகாடமி, ஓலோ கிட்ஸ், காஞ்சிபுரம் எஸ்.எம்.சில்க்ஸ், எஸ்ஆர்எம் குளோபல் ஹாஸ் பிடல்ஸ், காஞ்சிபுரம் பீட்டாமவுன்ட் லிட்டேரா ஜீ ஸ்கூல், காஞ்சிவாணி வித்யாலயா ஆகியவை இணைந்து நடத்துகின்றன. ஒவ்வொரு மனிதனின் அறிவு வளர்ச்சி, சுய சிந்தனைக்கு வாசிப்பு மிகவும் அவசியம். நம்முடைய வரலாற்றையும், பண்பாட்டையும் வாசிப்பே நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. நவீன அறிவியல், தொழில்நுட்பம் தற்போது நம் உள்ளங்கைக்குள் உலகத்தை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.
ஆனாலும், காட்சி ஊடகங்கள் நமக்கு ஒற்றைத்தன்மையான கருத்துகளையே அளிக்கின்றன. சமூக ஊடகங்களின் வழியே நொடிக்கொரு செய்தி நம் பார்வைக்கு வந்தாலும், செய்தியின் உண்மைத் தன்மையை அச்சு ஊடகங்களின் வழியாக மட்டுமே நம்மால் உறுதிசெய்ய முடிகிறது.
நாளிதழ் வாசிப்பு, புத்தக வாசிப்பு என வாசிப்பை சுவாசிக்கும் சமூகம்தான் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாகத் திகழும். புத்தக வாசிப்பு என்பது தனிப்பட்ட முறையிலும், சமூகத்துக்கும் நன்மை அளிக்கக்கூடிய செயல். வாசிப்பின் வழி அவரவர் கற்பனைக்கும் ஆற்றலுக்கும் ஏற்ப பன்முகமான கருத்துகள் உருவாகும்.
வாசிப்பின் சிறப்பை இளைய தலைமுறையினருடன் சேர்ந்து கொண்டாடும் இவ்விழாவில் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், எழுத்தாளருமான வெ.இறையன்பு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் பங்கேற்று, வாசிப்பின் அவசியம் குறித்து உரையாற்றுகின்றனர். இந்த நிகழ்வில் பங்கேற்பவர்கள் அனைவரும் பயனடையும் வகையில், சிறப்புத் தள்ளுபடியில் புத்தக விற்பனையும் இடம்பெறவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT