Published : 09 Aug 2025 01:10 AM
Last Updated : 09 Aug 2025 01:10 AM

இயற்கையை அனைவரும் நேசிக்க வேண்டும்: உலகப் புகழ்பெற்ற சிற்பக் கலைஞர் குமாரி நாகப்பன் அழைப்பு | ‘சிங்கா 60’

‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்து’ மற்றும் ‘தி இந்து பிசினஸ் லைன்’ இணைந்து நடத்தும் ‘சிங்கா 60’ கலைத் திருவிழாவின் ஒரு பகுதியாக ‘கலைப் படைப்புகளின் உருவாக்கம்’ என்ற தலைப்பில் சிறப்பு கலை சொற்பொழிவு அடையாறில் உள்ள ஃபோரம் ஆர்ட் கேலரியில் நேற்று நடைபெற்றது. இதில் சிங்கப்பூரைச் சேர்ந்த கலைஞர் குமாரி நாகப்பன் பங்கேற்று பேசினார். | படம்:எஸ்.சத்தியசீலன்

சென்னை: இயற்கையை அனைவரும் நேசிக்க வேண்டும் என்று ‘சிங்கா 60’ கலைத் திருவிழா சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் உலகப் புகழ்பெற்ற ஓவிய, சிற்பக் கலைஞர் குமாரி நாகப்பன் அழைப்பு விடுத்தார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரின் 60-வது தேசிய தின கொண் டாட்டத்தையொட்டி ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்து’ மற்றும் ‘தி இந்து பிசினஸ் லைன்’ இணைந்து சென்னையில் ‘சிங்கா 60’ என்ற 10 நாள் பிரம்மாண்ட கலைத் திருவிழாவை கடந்த ஆகஸ்ட் 1 முதல் கோலாகலமாக நடத்தி வருகின்றன. இதற்கான சிறப்பு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் சென்னை நகரில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன. இவ்விழாவின் 8-ம் நாள் நிகழ்ச்சியாக அடையாறு பத்மநாப நகரில் உள்ள ஃபோரம் ஆர்ட் கேலரியில் கலை சொற்பொழிவு நேற்று நடந்தது. இதில் உலகப் புகழ்பெற்ற ஓவிய, சிற்பக் கலைஞரான குமாரி நாகப்பன் ‘பொது கலை படைப்புகளின் உருவாக்கம்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:

அடிப்படையில் நான் ஒரு கருத்​தி​யல் சிற்​பக் கலைஞர். மலேசி​யா​வில் மலாய், சீனம் என பன்​முகக் கலாச்​சார சூழலில் வளர்ந்​தவள். அதனால், அவற்​றின் தாக்​கம் எனது படைப்​பு​களில் இழையோடும். எனது ஒவ்​வொரு கலைப் படைப்​பை​யும் ஒரு வரப்​பிர​சாத​மாக கருதுகிறேன். சிங்​கப்​பூரில் உள்ள விமான நிலை​யங்​கள், தேசிய அருங்​காட்​சி​யகங்​கள், விடு​தி​கள், பூங்​காக்​கள் மற்​றும் சீனா, மலேசி​யா, பிலிப்​பைன்​ஸ், இந்​தோ​னேசியா உள்​ளிட்ட நாடு​களில் பொது​வெளி​களில் எனது கலைப் படைப்​பு​களை பார்க்​கலாம்.

நான் இயற்​கையை ரசிக்​கிறேன், சிறிய தாவரங்​கள், சிறு சிறு உயி​ரினங்​கள் மிக​வும் பிடிக்​கும். அனை​வரும் இயற்​கையை நேசிக்க வேண்​டும். இதை மையப்​படுத்​தியே எனது படைப்​பு​கள் அனைத்​தும் உரு​வாக்​கப்​பட்​டிருக்​கும். அதில் இயற்​கை, தொடக்​கப் புள்​ளி​யாகவோ அல்​லது மையப் புள்​ளி​யாகவோ அமைந்​திருக்​கும். வாழ்​வியல் அனுபவம், உள்​ளார்ந்த உணர்​வு, பரஸ்பர நட்​புணர்வு போன்​றவை எனது கலைப் படைப்​பு​களுக்கு கருப்​பொருட்​களாக அமை​கின்​றன. ஒவ்​வொரு படைப்​பும் கதை சொல்​லி​யாக இருக்​கும். அதை காண்​போருக்கு மற்​றவர்​களிடம் பகிரக்​கூடிய ஏதேனும் ஒரு விஷ​யம் கண்​டிப்​பாக தோன்​றும். அதோடு அறி​வியல் உணர்​வை​யும் வெளிப்​படுத்​தும்.

கலைப் படைப்​பு​களுக்கு வடிவம் எந்த அளவுக்கு முக்​கியமோ அதே அளவுக்கு அவற்​றின் வண்​ணங்​களும் முக்​கி​யம். புது​மை​யான வடிவங்​களும், வண்​ணங்​களும் மக்​களை ஈர்க்​கும். சிவப்பு நிற ஆப்​பிள் என்​பது ஆரோக்​கி​யம், மருத்​து​வ​மனை என்​ப​தை​யும், பச்சை நிற ஆப்​பிள் உணவு, ஹோட்​டல், விருந்​தோம்​பலை​யும் நினை​வுக்கு கொண்​டு வரும். கலைப் படைப்பு தனி​நபர்​களை மட்​டுமின்றி அனைத்து தரப்​பினரை​யும் ஈர்க்​கக் கூடிய​தாக இருக்க வேண்​டும். இயற்​கையை வைத்தே நம்​மை​யை​யும் சுற்​றுச்​சூழலை​யும் அறிந்​து​கொள்ள முடி​யும்.

எனது படைப்​பு​களை வெளியூர்​களுக்​கும் வெளி​நாடு​களுக்​கும் கொண்​டு​சென்று அவற்றை நிர்மாணிக்​கும்​போது ஏற்​படும் அனுபவமே தனி. அப்​போது நான் நிறைய கற்​றுக்​கொள்​கிறேன். அந்த வகை​யில் சீனர்​களின் சுறுசுறுப்​பை​யும், விரை​வாக செய்​யும் பணி​யை​யும் பார்க்​கும்​போது எனக்கு வியப்​பாக இருக்​கும். எந்த வேலை​யை​யும் சரி​யாக​வும், விரை​வாக​வும் செய்து முடிக்​கும் மனோ​பாவம் சீனர்​களிடம் காணப்​படு​கிறது. இவ்​வாறு அவர் பேசி​னார்.

சிங்​கப்​பூர் பார்க் மருத்​து​வ​மனை வளாகத்​தில் உள்ள ஆளு​யுர ஆப்​பிள் சிலை, தி இண்​டர்​லேஸ் வளாகத்​தில் உள்ள நடன​மாடும் சிவப்பு மிள​காய் சிலை, சாங்கி விமான நிலை​யத்​தில் சிதறிக் கிடக்​கும் பெரிய குண்​டுமணி சிலைகள், ஐயோன் ஆர்ச்​சர்ட் வணிக வளாகத்​தில் உள்ள ஜாதிக்காய் சிலை, தேசிய அருங்​காட்​சி​யகத்​தில் குண்டு மிள​காய் சிலை உள்​ளிட்​டவை அவரது படைப்​பு​களில் குறிப்​பிடத்​தக்​கவை.

குமாரி நாகப்​பனுக்கு ‘இந்து தமிழ் திசை’ இயக்​குநர் லட்​சுமிநாத் நினை​வுப் பரிசு வழங்கி கவுரவித்​தார்​.​முன்​ன​தாக, ஃபோரம் ஆர்ட் கேலரி​யின் இயக்​குநர் ஷாலினி வரவேற்​றார். இந்​நிகழ்ச்​சி​யில் அடை​யாறு சிஷ்யா பள்ளி மாணவி​கள் மற்​றும் கலை ஆர்​வலர்​கள், ஆசிரியர்​கள் கலந்​து​கொண்​டனர். நிறை​வாக, ‘இந்து தமிழ் திசை’ இயக்​குநர் அகிலா விஜய் ஐயங்​கார் நன்றி கூறி​னார்.

‘சிங்கா 60’ நிகழ்ச்​சிக்​கான பங்​குதா​ரர்​களாக சிங்​கப்​பூர் தூதரகம், டிபிஎஸ் வங்​கி​யும் துணை பங்​கு​தா​ரர்​களாக டிவிஎஸ், லார்​சன் அண்ட் டூப்​ரோ, ஓலம் அக்​ரி, டிரான்​ஸ்​வோர்ல்​டு, நிப்​பான் பெயின்ட் அண்ட் எச்​ஒய்​சி, ராம்​ராஜ் காட்​டன், லலிதா ஜுவல்​லரி, ரெசிடென்சி டவர்​ஸ், போரம் ஆர்ட் கேலரி, மிஸ்​டர் ஓங், நாசி அண்ட் மீ, பம்​கின் டேல்​ஸ், மேவெண்​டோயர், சிங்​கப்​பூர் தமிழ் முரசு நாளிதழ் ஆகிய​வை​யும் உள்​ளன.

‘சிங்கா 60’ விழா​வின் 9-ம் நாளான இன்று (சனிக்​கிழமை) மாலை 6.30 மணிக்கு ராஜா அண்​ணா​மலைபுரத்​தில் உள்ள திரு​வாவடு​துறை ராஜரத்​தினம் கலை​யரங்​கத்​தில் ‘பார​தி​யார்​-​பார்​வை​யிலும், குரலிலும்' என்ற சிறப்பு நிகழ்ச்சி நடை​பெறுகிறது. இதில் பார​தி​யாரின் ஆன்​மிக பயணம் தொடர்​பான ஆவணப்​ படம் திரை​யிடப்​படு​கிறது. இந்த படத்தை சவுந்​தர்யா சுகு​மார் ஐயர் தயாரித்​துள்​ளார். தொடர்ந்து, ‘நல்​லிணக்​கத்​தில் பார​தி​யார்’ என்ற தலைப்​பில் சிங்​கப்​பூர்​-இந்​தியா இசைக்​குழு​வினரின்​ இசை நிகழ்ச்​சி நடைபெறுகிறது. கடைசி தின​மான ​நாளை (ஆக.10) விழா நிறைவடைகிறது.

விழா புதுமையாகவும் பூரிப்பாகவும் இருக்கிறது: ஆசிரியை நெகிழ்ச்சி - ‘சிங்கா 60’ கலைத் திருவிழா புதுமையாகவும் பூரிப்பாகவும் இருக்கிறது என்று அவ்விழாவில் நாள் தவறாமல் பங்கேற்று வரும் பொன்னேரி ஆசிரியை வித்யா லோகசுந்தர்ராஜ் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

பொன்னேரியைச் சேர்ந்த பகுதி நேர இந்தி ஆசிரியை வித்பா லோகசுந்தர்ராஜ். கும்பகோணத்தை பூர்வீகமாக கொண்டவர். இவர் ‘சிங்கா 60’ கலைத் திருவிழா தொடங்கிய ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தினமும் நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்று வருகிறார். விழாவின் 8-ம் நாளான நேற்று அடையாறு ஃபோரம் ஆர்ட் கேலரியில் நடைபெற்ற சிங்கப்பூர் கலைஞர் குமாரி நாகப்பன் நடத்திய கலை சொற்பொழிவு நிகழ்ச்சியிலும் உற்சாகமாகக் கலந்துகொண்டார்.

விழாவில் தினமும் பங்கேற்று வருவது குறித்து அவர் கூறும்போது, “எனது மகன் மூலமாகத்தான் ‘சிங்கா 60’ கலைத் திருவிழா குறித்து எனக்குத் தெரிய வந்தது. இந்த 10 நாள் நிகழ்ச்சியில் கண்டிப்பாக தினமும் கலந்து
கொள்ள வேண்டும் என்று முடிவுசெய்தேன்.

ஒவ்வொரு நாள் நிகழ்ச்சியும் எனக்கு புதுமையாகவும் பூரிப்பாகவும் இருக்கிறது. நான் இதுவரை சிங்கப்பூர் சென்றதில்லை. தற்போது சிங்கப்பூர்-இந்தியா இடையிலான உறவைக் கொண்டாடும் வகையில் நடத்தப்படும் இந்த விழா நிகழ்ச்சிகளை பார்க்கும்போது சிங்கப்பூர் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x