Published : 08 Aug 2025 12:28 AM
Last Updated : 08 Aug 2025 12:28 AM

வளர்ச்சிப் பாதையில் இந்தியா சரியான திசையில் பயணிக்கிறது: மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் உறுதி | ‘சிங்கா 60' 

‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்து’ மற்​றும் ‘தி இந்து பிசினஸ் லைன்’ சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற ‘சிங்கா 60' கலைத் திருவிழாவில் ‘இண்டியா கனெக்ட் சிங்கப்பூர் எடிஷன்' சிறப்பு விவாத நிகழ்ச்சியை, சிங்கப்பூர் துணை தூதர் எட்கர் பாங்க் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அருகில், ‘இந்து தமிழ் திசை' இயக்​குநர் அகிலா விஜய் ஐயங்கார், டிபிஎஸ் வங்கியின் சென்னை மண்டல தலைவர் எஸ்.எம்.பரத்வாஜ், ஓலம் அக்ரி குழுமத்தின் பிரதிநிதி குருநாத் ஆகியோர் உள்ளனர்.

சென்னை: வளர்ச்சிப் பாதை​யில் இந்​தியா சரி​யான திசை​யில் பயணம் செய்​கிறது என்று சென்​னை​யில் நடை​பெற்ற சிங்கா 60 கலைத் திரு​விழா விவாத நிகழ்ச்​சி​யில் மத்​திய அரசின் தலைமை பொருளா​தார ஆலோ​சகர் அனந்த நாகேஸ்​வரன் உறு​திபடத் தெரி​வித்​தார்.

சிங்​கப்​பூரின் 60-வது தேசிய தின கொண்​டாட்​டத்தை முன்​னிட்டு ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்​து’ மற்​றும் ‘தி இந்து பிசினஸ் லைன்’ இணைந்து சென்​னை​யில் ‘சிங்கா 60’ என்ற 10 நாள் கலைத் திரு​விழாவை ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கோலாகல​மாக நடத்தி வரு​கின்​றன. இவ்​விழா​வின் 7-ம் நாள் நிகழ்​வாக ‘இண்​டியா கனெக்ட் சிங்​கப்​பூர் எடிஷன்' என்ற தலைப்​பில் சிறப்பு விவாத நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது. இந்​நிகழ்ச்​சியை சிங்​கப்​பூர் துணை தூதர் எட்​கர் பாங்க் குத்​து​விளக்​கேற்றி தொடங்கி வைத்​தார்.

அவர் பேசும்​போது, ‘‘இந்​தி​யா​வுக்​கும்-சிங்​கப்​பூருக்​கும் இடையி​லான உறவு மிக​வும் பலமாக உள்​ளது. இரு நாடு​களுக்​கும் இடையே வர்த்தக உறவு மட்​டுமின்றி கலாச்சார ரீதியி​லான உறவும் இருக்​கிறது. கடந்த 10 ஆண்​டு​களில் இரு நாடு​களுக்கு இடையி​லான வர்த்​தகம் 2 முதல் 3 மடங்குவரை அதி​கரித்​திருக்​கிறது.

2005-ல் 20 பில்​லியன் சிங்​கப்​பூர் டால​ராக இருந்த இரு தரப்பு வர்த்​தகம் 2023-ல் 45.6 பில்​லியன் சிங்​கப்​பூர் டாலர் அளவுக்கு உயர்ந்​தது. அதே​போல் தொழில் முதலீடு​களும் 24 சதவீதம் அதி​கரித்​துள்​ளது. சிங்​கப்​பூருக்​கும் தமிழகத்​துக்​கும் நிறைய வரலாற்று தொடர்​பு​கள் உள்​ளன. 1800-ம் ஆண்டு தமிழகத்​திலிருந்து வர்த்​தகர்​கள் சிங்​கப்​பூருக்கு வந்​தனர். டிஜிட்​டல் பொருளா​தா​ரத்​தில் இந்​தி​யா​வும் சிங்​கப்​பூரும் சிறப்​பாக இணைந்து செயல்பட முடி​யும்” என்​றார்.

தொடர்ந்து இந்த விவாத நிகழ்ச்​சி​யில், இந்​தி​யா-சிங்​கப்​பூர் இடையி​லான ராஜ்ஜிய, பொருளா​தார, தொழில்​நுட்ப உறவு​கள் குறித்து விரி​வாக விவா​திக்​கப்​பட்​டது. இதில், மத்​திய அரசின் தலைமை பொருளா​தார ஆலோ​சகர் அனந்த நாகேஸ்​வரன் டெல்​லி​யில் இருந்​த​வாறு காணொலி காட்சி வாயி​லாக கலந்​து​ கொண்டு பேசி​ய​தாவது: உலகளா​விய வர்த்​தகத்​தில் இந்​தியா அதிக முதலீட்​டுடன் இயங்கி வரு​கிறது.

நம் நாட்​டில் வங்கி நடை​முறை​களில் தொழில்​நுட்​பங்​கள் அதி​கம் பயன்​படுத்​தப்​படு​கின்​றன. கடந்த 11 ஆண்​டு​களாக டிஜிட்​டல் உட்கட்​டமைப்பு பிரமிக்​கத்​தக்க வகை​யில் மேம்​படுத்​தப்​பட்​டுள்​ளது. வளர்ச்சிப் பயணத்​தில் நம் நாடு சரி​யான திசை​யில் பயணம் செய்​து​கொண்​டிருக்​கிறது. தொழில்​வளர்ச்​சிக்கு முதலீடும், தொழில்​நுட்​ப​மும் மிக​வும் முக்​கிய​மானவை. இந்​தி​யா​வில் தேவை​யான அளவுக்கு தொழிலா​ளர்​கள் உள்​ளனர். உள்​நாட்டு உற்​பத்தி தொடர்ந்து அதி​கரித்த வண்​ணம் உள்​ளது.

கடந்த 2020-களுக்கு பின்​னர் உலக நாடு​கள் வரி கட்​டுப்​பாடு​களை விதிக்க தொடங்​கின. இந்​தி​யா​வில் உலகமய​மாக்​கல் கொள்கை நடை​முறைப்​படுத்​தப்​பட்ட பிறகு வரி​களை குறைத்​தோம். அதிக உற்​பத்​தி, அதிக வர்த்​தகம் காரண​மாக, உலக நாடு​கள் இடையே வர்த்தக சமநிலை இருந்து வரு​கிறது. ஒரு​நாட்​டில் ஏற்​படும் அளவுக்கு அதி​க​மான உற்​பத்தி வளர்ந்து வரும் நாடு​களில் எதிர்​மறை தாக்​கத்தை ஏற்​படுத்​துகிறது. கடந்த 2008-ம் ஆண்டு உலக அளவில் ஏற்​பட்ட பொருளா​தார மந்​தநிலை, அதைத்​ தொடர்ந்து 2019-ம் ஆண்டு கரோனா பெருந்​தொற்று காரண​மாக வளர்ந்த நாடு​கள் வட்​டியை குறைத்​தன. எரிபொருள் மானி​யங்​கள் வழங்​கின.

வர்த்​தகத்​துறை​யில் அடுத்த 25 ஆண்​டு​களில் பல்​வேறு சவால்​களை எதிர்​கொள்ள நேரிடும். எரிசக்தி பாது​காப்​பு, தேவை​யான அளவு வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​கு​வது, செயற்கை நுண்​ணறிவு தொழில்நுட்​பம் (ஏஐ), உணவு பாது​காப்​பு, சமமான வரு​மான பகிர்​வு, வேளாண் உற்​பத்​தி, சிறு, குறு, நடுத்தர தொழில்​துறை​யில் உற்​பத்​தியை அதி​கரிப்​பது போன்​றவை அதில் குறிப்​பிடத்​தகுந்​தவை. வேளாண் உற்​பத்​தியை அதி​கரிப்​ப​தன் மூலம் பொருளா​தார வளர்ச்​சி​யில் 5 சதவீதத்தை அதி​கரிக்க முடி​யும்.

பல்​வேறு சவால்​களை எதிர்​நோக்​கி​யுள்ள சூழலிலும் நம் நாட்​டின் ஒட்​டுமொத்த உள்​நாட்டு உற்​பத்தி தொடர்ந்து அதி​கரித்த வண்​ணம் இருக்​கிறது. 2027-2028-ம் ஆண்​டில் இந்​தி​யா​வின் பொருளா​தா​ரம் 5 டிரில்​லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயரும் என்று சர்​வ​தேச செல​வாணி நிதி​யம் (ஐஎம்​எப்) மதிப்​பீடு செய்​துள்​ளது. நமது அண்டை நாடான சிங்கப்​பூருடன் இருதரப்பு வர்த்தக உறவு​களை மேலும் பலப்​படுத்த பல்​வேறு முயற்​சிகள் எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன. ஏராள​மான புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகி வரு​கின்​றன. மேலும், வரி​யில்லா வர்த்​தகம் மேற்​கொள்​வதுடன் தொடர்​பாக ஆசி​யான் நாடு​களு​டன் தொடர்ந்து பேச்​சு​வார்த்​தைகள் நடை​பெற்று வரு​கின்​றன. இவ்​வாறு அவர் பேசி​னார்.

மத்​திய அரசின் மின்​னணு மற்​றும் தகவல் தொழில்​நுட்​பத்​துறை செயலர் எஸ்​.கிருஷ்ணனும் டெல்​லி​யில் இருந்​த​வாறு காணொலி காட்சி வாயி​லாக பேசும்​போது, ‘‘டிஜிட்​டல் தொழில்​நுட்​பத்​துறை​யில் இந்​தி​யா​வும், சிங்​கப்​பூரும் இணைந்து சிறப்​பாக பணி​யாற்ற முடி​யும். அந்த வகை​யில், இணைய பாது​காப்​பு, திறன் மேம்​பாடு, குவாண்​டம் கம்ப்​யூட்​டிங், ஏஐ, ஸ்டார்ட்​-அப்​ஸ், தரவு பாது​காப்பு உள்​ளிட்​டவை அடங்​கிய டிஜிட்​டல் தொழில்​நுட்​பம் தொடர்​பான ஒரு புரிந்​துணர்வு ஒப்​பந்​த​மும், செமிகண்​டக்​டர் உற்​பத்தி தொடர்​பாக தனியே ஒரு புரிந்​துணர்வு ஒப்​பந்​த​மும் இரு நாடு​கள் இடையே போடப்​பட்​டுள்​ளது. பொருளா​தார வளர்ச்​சி​யில் டிஜிட்​டல் பொருளா​தா​ரம் முக்​கிய பங்கு வகிக்க முடி​யும்.

காணொலி மூலம் உரையாற்றிய மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன், மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் எஸ்.கிருஷ்ணன்.

நமது டிஜிட்​டல் பொருளா​தா​ரம் 30 சதவீதம் வளர்ந்​திருக்​கிறது. டிஜிட்​டல் தொழில்​நுட்ப உட்​கட்​டைப்பு வசதியை மேம்​படுத்த அரசு தனி​யாரும் கூட்​டுசேர்ந்து செயல்​பட்டு வரு​கினறன. அனைத்து மக்​களுக்​கும் டிஜிட்​டல் ஆதார் அட்டை வழங்​கி​யுள்​ளோம். கடந்த ஜூலை மாதத்​தில் மட்​டும் யுபிஐ வாயி​லாக ரூ.1500 கோடிக்கு பணப்​பரி​மாற்​றம் நடந்​திருக்​கிறது. 5 கோடி பேர் டிஜிட்​டல் லாக்​கர் கணக்கு வைத்​துள்​ளனர். கடந்த 2023-ம் ஆண்டு யுபிஐ வசதி தொடர்​பாக சிங்​கப்​பூருடன் இந்​தியா புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் செய்​தது. அந்த நடை​முறை சிறப்​பாக செயல்​படு​வ​தால் அதை இதர நாடு​களு​டன் பயன்​படுத்​த​வும் திட்​ட​மிட்​டுள்​ளோம்’’ என்​றார்.

சிங்​கப்​பூர், பிரான்ஸ் நாடு​களுக்​கான முன்​னாள் இந்​திய தூதர் ஜாவேத் அஷ்ரப் பேசுகை​யில், ‘‘சிறிய நாடான சிங்​கப்​பூர் உலக அளவில் பொருளா​தா​ரத்​தில் மிக வேக​மாக வளர்ந்து வரு​கிறது. தெற்​காசி​யா​வில் வர்த்​தக​மும், பொருளா​தா​ர​மும் வளர்ந்து வரும் சூழலில் சீனா மிகப்​பெரிய சக்​தி​யாக உரு​வெடுத்து வரு​கிறது. ஆசிய நாடு​கள் இணங்கி வரு​கின்​றன. இந்​தியா தெற்​காசிய நாடு​களு​டன் அதி​களவு வர்த்​தகத்தை மேற்​கொண்டு வரு​கிறது. பல்​வேறு பிரச்​சினை​கள் ஏற்​பட்​டாலும் இந்​தி​யா-சீனா உறவு மேம்​பட்டு வரு​கிறது” என்று குறிப்​பிட்​டார்.

விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆசிய ஆராய்ச்சி கழகத்தைச் சேர்ந்த கிஷோர் மெஹபூபானி, சிங்கப்பூர், பிரான்ஸ் நாடுகளுக்கான முன்னாள் இந்திய தூதர் ஜாவேத் அஷ்ரப். படங்கள்: எஸ்.சத்தியசீலன்

ஆசிய ஆராய்ச்​சிக் கழகத்​தைச் சேர்ந்த கிஷோர் மெஹபூ​பானி பேசுகை​யில், ‘‘சிங்​கப்​பூர் சுதந்​திரம் அடைந்த கால​கட்​டத்​தில் மக்​கள் உணவுக்​காக திண்​டாடினர், கல்வி வசதி கிடை​யாது. அடிப்​படை சுகா​தார வசதி இல்​லை. ஆனால் இப்​போது அதிக தனி​நபர் வரு​மானம் கொண்ட நாடு​களில் சிங்​கப்​பூரும் ஒன்​று. ஆசிய நாடு​களின் வளர்ச்சி காரண​மாக இந்த நூற்​றாண்டு ஆசிய நூற்​றாண்​டாக இருக்​கும்” என்​றார்.

மேலும் தி இந்து பிசினஸ் லைன் ஆசிரியர் ரகு​வீர் சீனி​வாசன், ஸெட்​வெர்க் நிறு​வனத்​தின் தலை​வர் (எலெக்ட்​ரானிக்ஸ் பிரிவு) ஜோஷ் போல்​ஜர் ஆகியோ​ரும் விவாதத்​தில் கலந்​து​கொண்டு பேசினர். சிஐஐ சென்னை மண்டல தலைவர் அஜித் சோர்டியா பேசினார். முன்​ன​தாக, ‘இந்து தமிழ் திசை’ இயக்​குநர் நாராயண் லஷ்மண் வரவேற்​றுப் பேசும்​போது, ‘‘இந்​தி​யா​வுக்​கும் சிங்​கப்​பூருக்​கும் இடையே 60 ஆண்டு கால​மாக நெருங்​கிய உறவு இருந்து வரு​கிறது. சிங்​கப்​பூரின் 6-வது தேசிய தின கொண்​டாட்​டத்​தையொட்டி இரு நாடு​களுக்கு இடையே கலாச்​சார, அறி​வார்ந்த கூட்​டு​முயற்​சி​யாக ‘சிங்கா 60’ கலைத்​திரு​விழா நடத்​தப்​படு​கிறது. சிங்​கப்​பூருக்​கும் இந்​தி​யா​வுக்​கும் இடையே வர்த்தக உறவு மட்​டுமல்ல கலாச்​சார உறவும் தொடர்ந்து பேணப்​பட்டு வரு​கிறது” என்று குறிப்​பிட்​டார்.

விழாவில் வரவேற்புரை ஆற்றுகிறார் ‘இந்து தமிழ் திசை’ இயக்குநர் நாராயண் லஷ்மண்.

தொடக்​க​விழா​வில் சிங்​கப்​பூர் துணை தூதர் வைஷ்ணவி வாசுதேவன், ‘இந்​து’ என்​.ர​வி, ‘இந்து தமிழ் திசை' இயக்​குநர்​கள் ரமேஷ் ரங்​க​ராஜன், விஜயா அருண், லட்​சுமி ஸ்ரீநாத் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர். ‘சிங்கா 60' நிகழ்ச்​சிக்​கான பங்​கு​தா​ரர்​களாக சிங்​கப்​பூர் தூதரகம், டிபிஎஸ் வங்​கி​யும் துணை பங்​கு​தா​ரர்​களாக டிவிஎஸ், லார்​சன் அண்ட் டூப்​ரோ, ஓலம் அக்​ரி, டிரான்​ஸ்​வோர்ல்​டு, நிப்​பான் பெயின்ட் அண்ட் எச்​ஒய்​சி, ராம்​ராஜ் காட்​டன், லலிதா ஜுவல்​லரி, ரெசிடென்சி டவர்​ஸ், ஃபோரம் ஆர்ட் கேலரி, மிஸ்​டர் ஓங், நாசி அண்ட் மீ, பம்​கின் டேல்​ஸ், மேவெண்​டோயர், சிங்​கப்​பூர் தமிழ் முரசு நாளிதழ் ஆகிய​வை​யும் உள்​ளன. இன்டஸ்ட்ரி பார்ட்னர் ஆக சிஐஐ, டி.வி.பார்ட்னராக இ டிவி நவ் ஆகியவை செயல்பட்டன.

இன்றும் நாளையும்: ‘சிங்கா 60' கலைத் திரு​விழா​வின் 8-ம் நாளான இன்று (வெள்​ளிக் ​கிழமை) காலை 11 மணிக்கு அடை​யாறு பத்​ம​நாப நகர் 5-வது தெரு​வில் அமைந்​துள்ள ஃபோரம் ஆர்ட் கேலரி​யில் சிங்​கப்​பூர் கலைஞர் குமாரி நாகப்​பன் பங்​கேற்​கும் கலை சொற்​பொழிவு நிகழ்ச்சி நடை​பெறுகிறது. ‘கலை படைப்​பு​களின் உரு​வாக்​கம்’ என்ற தலைப்​பில் அவர் உரை​யாற்​றுகிறார்.

நாளை (சனிக்​கிழமை) மாலை 6.30 மணிக்கு ராஜா அண்​ணா​மலைபுரம் ராஜரத்​தினம் கலை​யரங்​கில் ‘பார​தி​யார்​- ​பார்​வை​யிலும், குரலிலும்’ என்ற சிறப்பு நிகழ்ச்சி நடை​பெறுகிறது. இதில் பார​தி​யாரின் ஆன்​மீக பயணம் தொடர்​பான ஆவணப்​படம் திரை​யிடப்​படு​கிறது. இந்த படத்தை சவுந்​தர்​யா சுகு​மார்​ ஐயர்​ தயாரித்​துள்​ளார்​. மேலும்​, ‘நல்​லிணக்​கத்​தில்​ பார​தி​யார்’ என்​ற தலைப்​பில்​ சிங்​கப்​பூர்​-இந்​தி​யா இசைக்​குழுவின்​ இசை நிகழ்​ச்​சியும்​ நடைபெறுகிறது.

  • ‘சிங்கா 60’ நிகழ்ச்சிகளைப் பற்றி கூடுதலாக அறியவும், பங்கேற்பதற்கு பதிவு செய்யவும் இதோ இணைப்பு > சிங்கா 60 கலை திருவிழா
  • To Register Whatsapp type HI Singa60 at +91 9940699401
  • Email - singa50@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x