Published : 21 Jul 2025 06:55 AM
Last Updated : 21 Jul 2025 06:55 AM
சென்னை: ராம்ராஜ் காட்டன் நிறுவனம், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்தும் ‘அன்பாசிரியர் விருது’க்கான இணையவழி நேர்காணலில் ஆசிரியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு தனித்துவம் மிக்க கல்வியை அளிப்பதுடன், மாறுபட்ட சிந்தனையுடன் செயல்பட்டு பள்ளிக்கு பெருமை சேர்க்கும் அர்ப்பணிப்புமிக்க அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் 2020 முதல் ஆண்டுதோறும் ‘அன்பாசிரியர்’ விருது வழங்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து 5-வது முறையாக ‘அன்பாசிரியர்’ விருதுகளை ராம்ராஜ் காட்டன் நிறுவனத்துடன் சேர்ந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்க உள்ளது. இந்நிகழ்வின் பங்குதாரர்களாக லட்சுமி செராமிக்ஸ், பொன்வண்டு டிடர்ஜென்ட் நிறுவனங்கள் இணைந்துள்ளன.
இந்த விருதுக்கு தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மாவட்டங்களில் இருந்து 549 ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் 160 பேர் நேர்காணலுக்கு தகுதிபெற்றனர். இவர்களுக்கான இணையவழி நேர்காணல் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
எத்திராஜ் கல்லூரி பேராசிரியர் யு.என்.மகாலட்சுமி, கல்வியாளர் சாய் விஜயேந்திரன், லயோலா கல்லூரி பேராசிரியர் வி.சுமதி, அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் ஜெபக்குமார், ஓய்வுபெற்ற பேராசிரியர் அமல்ராஜ், கல்வியாளர் இளையராஜா கண்ணன், பேராசிரியர் சி.ஆர்.மஞ்சுளா, எஸ்எஸ்ஏ மாவட்டத் திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர்(ஓய்வு) வெ.மதி அழகன், எஸ்ஆர்எம் கல்லூரி பேராசிரியர் பா.ஜெய்கணேஷ் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
கற்பித்தலில் புதிய உத்திகளைப் பயன்படுத்துதல், புத்தக வாசிப்பு, மாணவர் நலன், பள்ளியில் மாணவர் சேர்க்கையை உயர்த்துதல், ஆரோக்கிய மேம்பாடு உள்ளிட்ட அம்சங்களை முன்வைத்து ஆசிரியர்களிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டன. மேலும், ஆசிரியர்களின் தனிச் சிறப்புகள் ஆய்வு செய்யப்பட்டன.
இதுகுறித்து நடுவர்கள் சி.ஆர்.மஞ்சுளா, வெ.மதி அழகன் ஆகியோர் கூறும்போது, “ஆசிரியர்களே ஒரு சமூகம் வளர்ச்சி பெற முக்கியப் பங்காற்றுகின்றனர். அவர்களை கவுரவிக்கும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ சார்பில் விருது வழங்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.
மாணவர்களை நல்வழிபடுத்தி, கல்வியை வழங்க வேண்டியது ஆசிரியர்களின் கடமையாகும். ஆசிரியர்கள் பலர் கற்பித்தலை தாண்டி, பல்வேறு தனிச் செயல்பாடுகளை மேற்கொண்டுவருவது பாராட்டுக்குரியது. இத்தகு விருதுகள் ஆசிரியர்கள் தங்களை புதுப்பித்துக்கொள்ள வழிவகுக்கும். பாடங்கள் கற்பித்தலைவிட, தனித்திறன், சமூகநல பங்களிப்புகள் உள்ளிட்ட அம்சங்களை முன்வைத்து, விருதுக்கு தகுதியான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்” என்றனர்.
நேர்காணலில் பங்கேற்ற ஆசிரியர்கள் மாசிலாமணி (கோவை), நித்யா ராஜசேகர் (புதுச்சேரி), நான்சி மேரி தங்கம் (நெல்லை), செந்தில்குமார் (சென்னை) ஆகியோர் கூறும்போது, “நேர்காணலில் பங்கேற்றது சிறந்த அனுபவமாக இருந்தது. இந்த நிகழ்வுக்கு பின்னர், ஆசிரியராக இன்னும் பல்வேறு அம்சங்களை கற்று, அவற்றைச் செயல்படுத்த வேண்டுமென புரிந்துகொண்டோம். விருதுக்கான தேர்வு நிலைகள் நம்பகத்தன்மையுடனும், திருப்திகரமாகவும் இருக்கின்றன.
இந்த விருது மற்ற ஆசிரியர்களுக்கும் ஊக்கமளிக்கும். இந்த வாய்ப்பை நல்கிய ‘இந்து தமிழ் திசை’க்கு நன்றிகள்”என்றனர்.
நேர்காணல் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் 40 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு ‘அன்பாசிரியர்’ விருது வழங்கப்பட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT