Published : 09 Feb 2024 06:30 AM
Last Updated : 09 Feb 2024 06:30 AM

‘குரூப் எம்' வழங்கும் ‘இந்து தமிழ் திசை’யின் ‘வணிக வீதி’ தொழில் முனைவோருக்கான களம் - ‘ஸ்டார்ட்அப் யுகத்தை புரிந்துகொள்ளல்' வழிகாட்டு நிகழ்வு

சென்னை: தற்போதைய ஸ்டார்ட்அப் காலகட்டத்தில் தொழில் தொடங்குவது குறித்தும் நடத்திவரும் தொழிலை மேம்படுத்துவது குறித்தும் மக்களுக்கு வழிகாட்டும் நோக்கில் சர்வதேச மார்க்கெட்டிங் நிறுவனமான ‘குரூப் எம்' வழங்கும் ‘இந்து தமிழ் திசை’யின் 'வணிக வீதி தொழில்முனைவோருக்கான களம்' எனும் வழிகாட்டி நிகழ்வு, நாளை (பிப்.10, சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையிலுள்ள சவேரா ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் ஃபேம் டிஎன், டேலி சொல்யூஷன்ஸ் நிறுவனங்கள் (FaMe TN, Tally solutions) உடன் இணைந்துள்ளன.

இந்த நிகழ்வில், தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷனின் இயக்குநரும் சிஇஓ-வுமான சிவராஜா ராமநாதன், கிஸ்ஃப்ளோ நிறுவனரும் சிஇஓ-வுமான சுரேஷ் சம்பந்தம், இப்போ பே நிறுவனரும் சிஇஓ-வுமான கே.மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, தற்போதைய சூழலில் எப்படி தொழில் தொடங்க வேண்டும், நடத்திவரும் தொழிலை எப்படி மேம்படுத்த வேண்டும், எப்படி சந்தைப்படுத்த வேண்டும், நிறுவனத்துக்கு எப்படி நிதி திரட்ட வேண்டும் என்பன தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்க உள்ளனர்.

தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில் தங்களது தொழில் வளர்ச்சி பெறுவதற்கான விளம்பரங்கள் செய்யும் வழிமுறைகள் குறித்து 'குரூப் எம்' மேனேஜிங் பார்ட்னர் ரத்தன் சிங் ரத்தோர் உரையாட இருக்கிறார். இவ்விரு நிகழ்வுகளையும் ‘இந்து தமிழ் திசை’யின் தலைமை இயக்கக அலுவலர் சங்கர் வி.சுப்ரமணியம், முதுநிலை உதவி ஆசிரியர் முகம்மது ரியாஸ் இருவரும் நெறியாள்கை செய்யவுள்ளனர்.

முக்கியத்துவம் என்ன? - தற்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலகட்டத்தைத் தொழில் துறை வல்லுநர்கள் ‘ஸ்டார்ட்அப் யுகம்’ என்று வரையறுக்கின்றனர். இந்தியாவில் 2016-ம் ஆண்டு 450 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இருந்தன. இன்று அந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 7,000 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளன. இந்தக் காலகட்டத்தில் நமது வழக்கமான தொழில் செயல்பாடுகள் மிகப் பெரும் மாற்றத்துக்கு உள்ளாகி வருகின்றன.

ஒருவர் சிறிய அளவில் உணவகம் நடத்தலாம், ஜவுளிக் கடையோ, காலணி விற்பனையகமோ வைத்திருக்கலாம். இந்த வழக்கமான தொழில் செயல்பாடுகள்கூட இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் புதிய பரிணாமத்துக்கு உள்ளாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.

தொழில்முனைவோர் இந்த மாற்றத்தை உணர்வதும், இந்த மாற்றத்துக்கேற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்வதும் அவசியம். அதற்கான வழிகாட்டும் நிகழ்ச்சி இது. தொழில் துறையில் சாதித்த முன்னோடிகள், இந்திய அளவில் கவனம் ஈர்க்கும் ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர், மார்க்கெட்டிங் துறை நிபுணர்கள் கலந்துகொண்டு, பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பங்கேற்க விரும்புபவர்கள் https://www.htamil.org/VVCHE என்ற லிங்கை கிளிக் செய்து, பதிவு செய்து கொள்ளவும். குறைவான எண்ணிக்கையிலான இருக்கைகளே இருப்பதால் அதற்கேற்ப அனுமதி வழங்கப்படும். உங்கள் பங்கேற்பை உறுதிசெய்ய, விரைந்து முன்பதிவு செய்யுங்கள். நிகழ்வில் பங்கேற்க முன்பதிவு அவசியம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x