Published : 06 Aug 2025 12:37 AM
Last Updated : 06 Aug 2025 12:37 AM
சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் ‘சிங்கா 60’ கலைத் திருவிழாவையொட்டி “சிங்கப்பூர்-இந்தியா இடையிலான ராஜ்ஜிய, பொருளாதார, தொழில்நுட்ப உறவுகள்” தொடர்பான சிறப்பு விவாத நிகழ்ச்சி நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதில் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
சிங்கப்பூரின் 60-வது தேசிய தினத்தை முன்னிட்டு ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்து’ மற்றும் ‘தி இந்து பிசினஸ் லைன்’ இணைந்து சென்னையில் ‘சிங்கா 60’ என்ற பிரம்மாண்ட கலைத்திருவிழாவை 10 நாட்கள் கோலாகலமாக நடத்தி வருகின்றன.
பல்சுவை நிகழ்ச்சிகள் நிறைந்த இந்த திருவிழா ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கி தொடர்ந்து சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அடையாறு பத்மநாபா நகரில் உள்ள ஃபோரம் ஆர்ட் கேலரியில் ஆகஸ்ட் 30-ம் தேதி வரையில் ஓவிய-சிற்பக் கண்காட்சியும், தி.நகர் தியாகராய சாலையில் உள்ள தி ரெஸிடென்ஸி டவர்ஸ் ஹோட்டலில் (ஸ்கை) ஆகஸ்ட் 10-ம் தேதி வரையில் சிங்கப்பூர் உணவு திருவிழாவும் நடைபெறுகின்றன.
இந்திய திரைப்படங்களில் சிங்கப்பூர் எவ்வாறு சித்திகரிக்கப்படுகிறது என்பதை மையப்படுத்தும் வகையில் ‘ஸ்கீரின் அண்ட் சிட்டி’ என்ற 2 நாள் சிறப்பு நிகழ்ச்சி ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் உள்ள பிவிஆர் தியேட்டரில் ஆகஸ்ட் 4-ம் தேதி தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியில் நடிகர்கள் ஜெய், நடிகர் சிவா, நிதின் சத்யா, பிரேம்ஜி நடித்த ‘சென்னை 600 028’ படம் திரையிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அந்த தியேட்டரில் நேற்று மாலை நடிகர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த், நடிகை ஜெயப்பிரதா ஆகியோர் நடித்த ‘நினைத்தாலே இனிக்கும்’ படம் திரையிடப்பட்டது. சிங்கப்பூரில் உள்ள முக்கிய இடங்கள், வாழ்க்கை முறை, பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் அப்படத்தை பொதுமக்கள் உற்சமாகமாகக் கண்டுரசித்தனர்.
‘சிங்கா 60’ நிகழ்ச்சிக்கான பங்குதாரர்களாக சிங்கப்பூர் தூதரகம், டிபிஎஸ் வங்கியும் துணை பங்குதாரர்களாக டிவிஎஸ், லார்சன் அண்ட் டூப்ரோ, ஓலம் அக்ரி, டிரான்ஸ்வோர்ல்டு, நிப்பான் பெயின்ட் அண்ட் எச்ஒய்சி, ராம்ராஜ் காட்டன், லலிதா ஜுவல்லரி, ரெசிடென்சி டவர்ஸ், போரம் ஆர்ட் கேலரி, மிஸ்டர் ஓங், நாசி அண்ட் மீ, பம்கின் டேல்ஸ், மேவெண்டோயர், சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழ் ஆகியவையும் உள்ளன.
‘சிங்கா 60’ கலைவிழாவின் ஆறாவது நாள் நிகழ்ச்சியாக இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு அடையாறு பத்மநாபா நகர் 5-வது தெருவில் அமைந்துள்ள ஃபோரம் ஆர்ட் கேலரியில் “ஆசிய கலாச்சாரங்களில் ராமாயணம்” என்ற தலைப்பில் சிங்கப்பூரைச் சேர்ந்த இசை, நடனக் கலைஞர் அரவிந்த் குமாரசாமி கலை சொற்பொழிவு ஆற்றுகிறார். நாளை (வியாழக்கிழமை) ) பிற்பகல் 3 மணிக்கு ‘இண்டியா கனெக்ட் சிங்கப்பூர் எடிசன்’ என்ற தலைப்பிலான சிறப்பு விவாத நிகழ்ச்சி கிண்டியில் உள்ள ஹோட்டல் ஐடிசி கிராண்ட் சோழாவில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், இந்தியா-சிங்கப்பூர் நாடுகள் இடையிலான ராஜ்ஜிய, பொருளாதார, தொழில்நுட்ப உறவுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது. இதில், ஆசிய ஆராய்ச்சிக்கழகத்தைச் சேர்ந்த கிஷோர் மதுபானி, மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன், மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் எஸ்.கிருஷ்ணன், சிங்கப்பூர், பிரான்ஸ் நாடுகளுக்கான முன்னாள் இந்திய தூதர் ஜாவத் அஷ்ரப் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT