Published : 06 Jun 2015 10:02 AM
Last Updated : 06 Jun 2015 10:02 AM

மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் 10

கன்னடத்தில் புகழ் பெற்ற வரலாற்றுப் புதினங்களை எழுதியவரும் கன்னட சிறுகதை களைச் செழுமைப்படுத்தியவருமான மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (Maasthi Venkatesha Iyengar) பிறந்த தினம் இன்று (ஜூன் 6). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தின் கோஷாலி என்ற இடத்தில் தமிழ் பேசும் குடும்பத்தில் (1891) பிறந்தார். இளமைப் பருவத்தை மாஸ்தி என்ற கிராமத்தில் கழித்தார். 1914-ல் சென்னை பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

l இந்தியன் சிவில் சர்வீஸ் தேர்வை முடித்து, மாவட்ட ஆட்சியராக கர்நாடகாவில் பல இடங்களில் பணியாற்றினார். இடைவிடாத அரசுப் பணிக்கு நடுவிலும், எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது. சிறிது காலம் ஆங்கிலத்தில் எழுதி வந்தார். பிறகு கன்னட மொழியில் சிறுகதைகள், நாவல்கள் எழுதத் தொடங்கினார்.

l மாஸ்தி எழுதிய முதல் நூல் ‘ரங்கன மதுவே’ 1910-ல் வெளிவந்தது. இவரது ‘கேலவு சன்ன கேட்டகளு’ என்ற சிறுகதைத் தொகுப்பு, நவீன கன்னட இலக்கிய உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

l தத்துவங்கள், அழகியல், சமுதாயம் பற்றி நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். பல நாடகங்கள் எழுதியுள்ளார். புகழ்பெற்ற வேற்றுமொழி நாடகங்களை மொழிபெயர்த்துள்ளார். 26 ஆண்டுகள் சிவில் சர்வீஸில் பணியாற்றியவர், 1943-ல் ராஜினாமா செய்தார். ஸ்ரீநிவாசா என்ற புனைப் பெயரில் சிறுகதைகள் எழுதினார்.

l ‘ஜீவனா’ என்ற மாதாந்திர பத்திரிகையின் ஆசிரியராக 1944 முதல் 1965 வரை பணியாற்றினார். ‘சிக்கவீர ராஜேந்திரா’, ‘சென்னபசவ நாயக்கா’ ஆகிய புகழ்பெற்ற வரலாற்றுப் புதினங்களைப் படைத்தார்.

l வரலாற்றுப் புனைவு என்பதற்கான மிகச் சிறந்த உதாரணமாக இவரது ‘சிக்கவீர ராஜேந்திரா’ நாவல் பேசப்பட்டது. நாவலின் வடிவமும், எழுதப்பட்ட விதமும், இயல்பான பேச்சு மொழியும் அற்புதமானவை என்று புகழப்பட்டன. இந்த நாவலுக்கு 1983-ல் ஞானபீட விருது வழங்கப்பட்டது. அப்போது இவருக்கு வயது 92.

l படைப்பாற்றல் மிக்க எழுத்தாளரான மாஸ்தி 123 கன்னட நூல்கள், 17 ஆங்கில நூல்கள் எழுதியுள்ளார். இவர் நல்ல பேச்சாளரும்கூட. இவரது பல படைப்புகள் தமிழ் உட்பட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், வீட்டில் தமிழில்தான் பேசுவார்.

l ஆரம்பகால கன்னட சிறுகதைகளை செழுமைப்படுத்தியவர்களில் முக்கியமானவராக மாஸ்தி கருதப்படுகிறார். ‘மாஸ்தி கன்னடட ஆஸ்தி’ (மாஸ்தி கன்னடத்தின் ஆஸ்தி) என்று புகழப்பட்டார். மைசூர் மகாராஜா இவருக்கு ‘ராஜசேவசக்தா’ என்ற பட்டத்தை வழங்கி கவுரவித்தார்.

l மாஸ்தி கிராமத்தில் இவரது வீடு நூலகமாக மாற்றப்பட்டு, கர்நாடக அரசால் பராமரிக்கப்படுகிறது. அங்கு ‘மாஸ்தி ரெசிடென்சியல் ஸ்கூல்’ என்ற பள்ளியை கர்நாடக அரசு 2006-ல் தொடங்கியது.

l தமிழராகப் பிறந்து கன்னட இலக்கியத்தில் சாதனை படைத்த மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் 95 வயதில் (1986) மறைந்தார். அவரது நினைவைப் போற்றும் விதமாக, சிறந்த கன்னட எழுத்தாளர்களுக்கு ‘மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் விருது’ 1993 முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x