Published : 17 May 2015 11:32 AM
Last Updated : 17 May 2015 11:32 AM
இங்கிலாந்தை சேர்ந்த அறிவியலாளரும், பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவருமான எட்வர்டு ஜென்னர் (Edward Jenner) பிறந்த தினம் இன்று (மே 17). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# இங்கிலாந்தின் பெர்க்லே நகரில் (1749) பிறந்தார். தந்தை மதச் சடங்குகள் செய்பவர். வோட்டன், சிரென் செஸ்டர் ஆகிய இடங்களில் ஜென்னர் பள்ளிக் கல்வி பெற்றார். 14-வது வயதில் டேனியல் லட்லாவ் என்ற அறுவை சிகிச்சை நிபுணரிடம் சேர்ந்து 7 ஆண்டுகள் மருத்துவப் பயிற்சி பெற்றார். மிகச் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக மாறினார்.
# கவ் பாக்ஸ் (Cow-pox) நோய் கண்டவர்களுக்கு பெரியம்மை வராது என்ற கருத்தில் ஜான் ஃபியூஸ்டர் என்ற மருத்துவர் 1765-ல் ஒரு கட்டுரை எழுதி லண்டன் மருத்துவக் கழகத்துக்கு அனுப்பினார். அதற்கு அவரால் சரியான விளக்கம் அளிக்க முடியவில்லை.
# பெரியம்மைக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தே தீருவது என்ற உறுதியுடன் 20 ஆண்டுகாலம் ஆராய்ச்சி மேற்கொண்டார். 1792-ல் செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார். இயற்கையை அதிகம் நேசித்தார். குயில்களின் வாழ்க்கை முறை குறித்து ஆய்வு மேற்கொண்டு பல கட்டுரைகளை வெளியிட்டார்.
# 1796-ல் கவ் பாக்ஸ் நோய் கண்ட பெண்ணின் விரலில் இருந்து கிருமியை எடுத்து ஒரு சிறுவனுக்கு செலுத்தினார். சிறுவனும் நோயால் தாக்கப்பட்டான். 7 வாரங்கள் கழித்து பெரியம்மையால் தாக்கப்பட்டவர் உடலில் இருந்து கிருமியை எடுத்து அதே சிறுவன் உடலில் செலுத்தினார். ஆனால், அந்த சிறுவனை பெரியம்மை தாக்கவில்லை.
# தொடர்ந்து பலரிடம் நடத்தப்பட்ட சோதனை வெற்றியடைந்தது. கவ் பாக்ஸ் கிருமிகளை மென்மைப்படுத்தி ஊசிமூலம் ஒருவரது உடலில் செலுத்தினால் அவரை பெரியம்மை தாக்காது என்பதை திட்டவட்டமாக நிரூபித்தார்.
# ஆராய்ச்சி முடிவுகளை 1778-ல் வெளியிட்டார். இயற்கையையும் மனிதகுலத்தையும் அளவுகடந்து நேசித்த இவர் தனது இந்த அரிய கண்டுபிடிப்புக்கு எந்த காப்புரிமையும் பெறாமல் இலவசமாக வழங்கினார்.
# அம்மை குத்துதல் குறித்தும் ஆராய்ந்து கட்டுரைகள் எழுதினார். ஏழை, எளியவர்களுக்கு இலவசமாக அம்மை ஊசி குத்தினார். தினமும் இவரது அறைக்கு முன்பு சுமார் 300 பேர் வரிசையில் நின்று அவரிடம் அம்மை தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
# ஜென்னரை கவுரவித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றம் 1802-ல் 10 ஆயிரம் பவுண்டுகள் வழங்கியது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு மேலும் 20 ஆயிரம் பவுண்டுகளை வழங்கியது. அந்தத் தொகையை கொண்டு 1808-ல் தேசிய தடுப்பூசிக் கழகத்தை நிறுவினார். இவரது தடுப்பூசி முறை பின்னர் பல ஆபத்தான நோய்களுக்கு தடுப்பு மருந்து கண்டறிய முன்னோடியாக அமைந்தது.
# பெரியம்மை தடுப்பூசியால் ஜென்னரின் புகழ் உலகெங்கும் பரவியது. அம்மை நோயை முழுவதுமாக விரட்டியவர் என்று இவரை உலகம் போற்றியது.
# மருத்துவ உலகுக்கு தன்னிகரில்லாத கொடையை வழங்கி, கோடிக்கணக்கான உயிர்களைக் காத்தவரும் நோய் தடுப்பூசிகளின் தந்தை என்று போற்றப்படுபவருமான ஜென்னர் 74 வயதில் (1823) மறைந்தார்.
- ராஜலட்சுமி சிவலிங்கம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT