Last Updated : 23 Jan, 2025 06:54 AM

 

Published : 23 Jan 2025 06:54 AM
Last Updated : 23 Jan 2025 06:54 AM

“நான் விடுதலை பெற்றுக் கொடுக்கிறேன்” - வீர முழக்கமிட்ட புரட்சியாளர் நே​தாஜி சுபாஷ் சந்திர போஸ் | பிறந்தநாள் பகிர்வு

இந்திய விடு​தலைப் போரின் முக்​கியமான ஆளுமை​யும், ஆங்கிலேய அரசுக்கு எதிராக ஆயுதமேந்​திப் போர் புரிந்த ராணுவப் படையை வழிநடத்​தி​ய​வருமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், 1897 ஜனவரி 23-ல் ஒடிசா மாநிலத்​தில் உள்ள கட்டக்​கில் பிறந்​தார்.

ஆங்கிலேயே அரசுக்கு எதிரான தேசி​யவாத செயல்​பாடு​களில் பங்கேற்​றதற்காக கொல்​கத்தா மாநிலக் கல்லூரியி​லிருந்து நீக்​கப்​பட்​டார். அங்கு ஸ்காட்​டிஷ் சர்ச் கல்லூரி​யில் பட்டப் படிப்பை நிறைவுசெய்த பின்னர் இங்கிலாந்து சென்று, ஐசிஎஸ் தேர்ச்சி பெற்​றார். ஆனால், ஆங்கிலேய அரசின் கொடுமைகளை எதிர்த்து, பிரிட்​டிஷ் அரசின் கீழ் பணியாற்ற மறுத்து, விடு​தலைப் போராட்​டத்​தில் பங்கேற்​றார்.

மகாத்மா காந்​தி​யின் ஒத்துழை​யாமை இயக்​கத்​தில் பங்கேற்ற போஸ், வங்கத்​தில் சித்தரஞ்சன் தாஸின் கீழ் இந்திய தேசிய காங்​கிரஸ் கட்சி​யில் பணியாற்றத் தொடங்​கினார். ஆங்கிலேயர்​களுக்கு எதிரான போராட்​டத்​தால் 1921-ல் கைது செய்​யப்​பட்​டார். புரட்​சிக் குழுக்​களுடன் தொடர்​பில் இருந்​தார் என்ற சந்தேகத்​தின் பேரில், பிரிட்​டிஷ் அரசு அவரை பர்மாவுக்கு நாடு கடத்​தி​யது.

1927-ல் தாய்​நாடு திரும்பிய அவர், வங்க காங்​கிரஸ் கிளை​யின் தலைவ​ராகத் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார். பின்னர் காங்​கிரஸ் பொதுச் செயலா​ளராகி, நேரு​வுடன் இணைந்​துப் பணியாற்றினார். ஆங்கிலேய அரசுக்கு எதிரான வன்முறைத் தாக்​குதல்​களுக்கு ஆதரவாக இருந்​ததற்காக பலமுறை சிறை​யில் அடைக்​கப்​பட்​டார் போஸ்.

உடல் நலிவுற்றிருந்த​போதும் ஐரோப்பா சென்று அங்குள்ள தலைவர்களை சந்தித்து, இந்திய விடு​தலைக்கு ஆதரவு திரட்​டி​னார். மீண்​டும் இந்தியா திரும்பி 1938-ல் இந்திய தேசிய காங்​கிரஸின் தலைவ​ராகத் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார். ஒருகட்​டத்​தில் காந்​தி-​போஸ் ஆகியோ​ருக்​கிடையே முரண்கள் அதிகரித்தன. 1939-ல் மீண்​டும் காங்​கிரஸ் தலைவராக போஸ் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார். காந்​தி​யின் ஆதரவைப் பெற்ற வேட்​பாளர் தோற்​றார். ஆனால், காந்​தி​யின் ஆதரவின்றி பதவி​யில் தொடர விரும்​பாமல், போஸ் பதவியைத் துறந்​தார். விடு​தலைக்​குப் போரிட்ட புரட்​சிகர சக்திகளை ஒன்று​திரட்டும் நோக்​கில் ஃபார்​வர்டு பிளாக் கட்சி​யைத் தொடங்​கினார்.

1940-ல் மீண்​டும் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். சிறை​யில் அவர் உண்ணா​விரதப் போராட்​டத்​தில் ஈடுபட்​ட​தால் அச்சமடைந்த பிரிட்​டிஷ் அரசு, அவரை விடு​வித்​தது. பின்னர், கொல்​கத்​தா​விலிருந்து காபூல், மாஸ்கோ வழியாக ஜெர்​மனியை அடைந்​தார். இரண்​டாம் உலகப் போர் நேரத்​தில் இந்தியா​விலிருந்து பிரிட்​டிஷ் ஆட்சியை அகற்று​வதற்​காக, ஜெர்​மனி​யில் இருந்த இந்தி​யர்களை உள்ளடக்கிய ராணுவப் படையுடன் இணைந்து செயல்​பட்​டார். அங்கு​தான் அவருக்கு `நேதாஜி' (மரி​யாதைக்​குரிய தலைவர்) என்ற அடைமொழி வழங்​கப்​பட்​டது.

இரண்​டாம் உலகப் போரில் ஜெர்​மனி​யின் கூட்​டாளியாக இருந்த ஜப்பான் தென்​கிழக்கு ஆசியா மீது படையெடுத்த​போது, போஸ் ஜப்பானுக்​குச் சென்​றார். தென்​கிழக்கு ஆசியா​வில் அதற்கு சில ஆண்டு​களுக்கு முன்பு தொடங்​கப்​பட்டு கலைக்​கப்​பட்​டிருந்த இந்திய தேசிய ராணுவம் புத்​துயிர்​பெற்று, போஸின் தலைமை​யில் இயங்கத் தொடங்​கியது.

“உங்கள் ரத்தத்​தைக் கொடுங்கள், நான் விடுதலை பெற்றுக்​ கொடுக்​கிறேன்” என்பது போன்ற அவரது புகழ்​பெற்ற வாசகங்​களாலும், களச் செயல்​பாடு​களாலும் ஈர்க்​கப்​பட்டு பர்மா, மலேசியா, இந்தோ​னேசியா உள்ளிட்ட நாடு​களில் வாழ்ந்த இந்திய இளைஞர்கள் பலர், இந்திய தேசிய ராணுவத்​தில் இணைந்து பிரிட்​டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடத் தொடங்​கினர்.

ஜப்பான் படைகளுடன் கோஹிமா, இம்பால் வழியாக `இந்திய தேசிய ராணுவம்' (ஐஎன்ஏ) இந்தியா​வுக்​குள் நுழைந்​தது. ஜப்பான் அரசின் முழு​மையான ஆதரவு கிடைக்​காத​தால், பிரிட்​டிஷ் இந்திய ராணுவத்​திடம் தோல்​வி​யுற்று ஐஎன்ஏ பின்​வாங்​கியது. இரண்​டாம் உலகப் போரில் பிரிட்​டனிடம் ஜப்பான் சரணடைந்ததை அடுத்து, இந்திய தேசிய ராணுவத்​தில் எஞ்சி​ய​வர்​களும் சரணடைய நேர்ந்​தது.

1945 ஆகஸ்ட் 18 ஜப்​பான் ஆக்​கிரமிப்​பிலிருந்த தைவானில் ஒரு ​விமான ​விபத்​தில் ​போஸ் மரணமடைந்​ததாக ஜப்​பான் அரசு அறி​வித்​தது. ​போஸின்​ ஆதர​வாளர்​கள்​, அவரது மரணத்​துக்​கு சொல்​லப்​பட்​ட ​காரணத்​தை ஏற்​க மறுத்​தனர்​. அவரது மரணத்​தில்​ இன்​றுவரை மர்​மம்​ நில​வு​கிறது.

- மகி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x