Last Updated : 10 Apr, 2025 06:20 PM

 

Published : 10 Apr 2025 06:20 PM
Last Updated : 10 Apr 2025 06:20 PM

மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஏப்.10 - 16

மகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன்(வ), சூரியன் - பஞ்சம ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள் | கிரகமாற்றம்: 14.04.2025 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சூரியன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எதையும் கண்டு அஞ்சாமல் பணியாற்றுவீர்கள். வாக்குவன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். பணதேவை ஏற்படலாம். தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும். வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் சொல்வதை செய்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் அமைதி ஏற்படும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பெண்களுக்கு புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் பெருமளவில் தேடி வரும். அரசியல்வாதிகளுக்கு உங்கள் செல்வாக்கு நாளுக்குநாள் பெருகி வரும். பொருளாதார வசதி நல்ல முறையில் மேம்படும். மாணவர்களுக்கு ஆசிரியர் சொல்படி பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற உதவும்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்சினைகள் தீரும். தொடங்கிய வேலையை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள்.

திருவோணம்: இந்த வாரம் கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது. பண விவகாரங்களில் கவனம் தேவை.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். மாணவர்கள் நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. மனக்கஷ்டம், பணகஷ்டம் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

பரிகாரம்: சனிக்கிழமையில் விநாயகரை வழிபடுவது எல்லா காரியங்களும் நன்றாக நடக்க உதவும். கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் புதன், சனி - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன்(வ), சூரியன் - சுக ஸ்தானத்தில் குரு - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள் | கிரகமாற்றம்: 14.04.2025 அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து சூரியன் தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் உங்களது செயல்களுக்கு பாராட்டுகள் கிடைக்க பெறுவீர்கள். சுபச்செலவு அதிகரிக்கும். வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை நீங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவரை நம்பி பொறுப்புக்களை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பெண்களுக்கு அடுத்தவருக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு முயற்சி செய்தால் பல புதிய வாய்ப்புகளைப் பெறலாம். அரசியல்வாதிகளுக்கு உங்களின் பணிகளில் கவனம் செலுத்துவது நன்மை தரும். மாணவர்களுக்கு பாடங்களை படிக்கும் போது மிகுந்த கவனத்துடன் படிப்பது நல்லது.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் மனத்தெளிவு உண்டாகும். எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் திறமை அதிகரிக்கும். வயிறு கோளாறு உண்டாகலாம். பணவரத்து கூடும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். ஆன்மீக நாட்டம் தெய்வ பக்தி அதிகரிக்கும்.

சதயம்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஏற்றுமதி சிறக்கும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்வார்கள். விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை.

பரிகாரம்: சனிக்கிழமையில் நந்தீஸ்வரரை வழிபடுவது மனோபலத்தை அதிகரிக்கச் செய்யும். எதிர்ப்புகள் அகலும்.

மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - ராசியில் ராகு, சுக்கிரன்(வ), சூரியன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் புதன், சனி என வலம் வருகிறார்கள் | கிரகமாற்றம்: 14.04.2025 அன்று ராசியில் இருந்து சூரியன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்ப்புகள் விலகும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். மரியாதை கூடும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். பெண்களுக்கு மனோ தைரியம் கூடும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும்.

அரசியல்வாதிகளுக்கு பலரும் பொறாமைப்படும் அளவிற்கு உங்கள் வளர்ச்சி இருக்கும். மேலிடத்திலிருந்து முழு ஆதரவும் கிடைக்கப்பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மனதில் நம்பிக்கை உண்டாகும்.

பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் மனோ தைரியம் கூடும். எதிர்ப்புகள் விலகும். எந்த சூழ்நிலையையும் அனுசரித்து செல்வீர்கள். வீண்குழப்பம், காரியத் தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கவன தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து தாமதப்படும்.

உத்திரட்டாதி: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் மெத்தனபோக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம்.

ரேவதி: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷனை உண்டாக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. தாய், தந்தையின் உடல்நிலையில் எச்சரிக்கை அவசியம்.

பரிகாரம்: பெருமாளை வணங்கி வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரத்து கூடும். கடன் பிரச்சினை தீரும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x