Published : 08 May 2025 06:41 PM
Last Updated : 08 May 2025 06:41 PM
மகரம்: எங்கும் எதிலும் முதலிடத்தைப் பிடிக்க நினைக்கும் நீங்கள் சிரமங்களையும் சிரித்த முகத்தோடு எதிர்கொண்டு வெற்றி காண்பவர்கள். உங்கள் ராசிக்கு, (திருக்கணிதப்படி) மே 14 முதல் 6-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார் குருபகவான். அலைச்சலும் வேலைச்சுமையும் உண்டு என்றாலும், குருவின் திருவருள் பார்வை உங்களுக்குப் பலவிதத்திலும் ஆதாயத்தை அளிப்பதாக அமையும். நண்பர்கள் சிலர் உங்களை விட்டு ஒதுங்கிப் போவார்கள். வீண் வதந்திகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சின்னச் சின்ன பகையும், மோதலும் ஏற்படும். கவனம் தேவை. சகோதர, சகோதரிகளை அனுசரித்து நடந்து கொள்ளவும். வயல், வாய்க்கால் விஷயமாக ஏதேனும் மனஸ்தாபம் இருந்தால் பேசி, தீர்த்துக் கொள்ளவும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்து கட்டுவீர்கள். ஊர் மக்களிடமும் இணக்கமான போக்கை கடைபிடிக்கவும்.
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். பழைய வழக்குகள் ஏதேனும் இருந்தால், அவை தொடர்பாக கவனம் செலுத்துவது அவசியம். வழக்கறிஞரை ஆலோசித்துச் செயல்படுங்கள். தானாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம். பேச்சிலும், செயலிலும் நிதானம் அவசியம். இரவு நேரப் பயணத்தைத் தவிர்க்கவும். சிறு சிறு வாகன விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதேபோல் வாகனம் பழுதுபட்டு, பயணம் தடைபடவும் வாய்ப்பு உண்டு.
குரு பகவானின் பார்வை பலன்கள்: குருபகவான் 2-ம் இடத்தைப் பார்ப்பதால், குடும்பத்தில் சந்தோஷம் நிரம்பியிருக்கும். பல வகையிலும் பணவரவு உண்டு. எல்லா விஷயங்களிலும் வெற்றி உண்டு. பேச்சில் நிதானம் பிறக்கும். வழக்கில் வெற்றி கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் இருந்த சந்தேகம் தீரும். தாம்பத்தியம் இனிக்கும். மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்காதீர்கள்.
உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தை குருபகவான் பார்ப்பதால், உத்தியோகத்தில் அதிரடி முன்னேற்றம் உண்டு. மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். பணிச்சுமை உண்டு என்றாலும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கும். உயரதிகாரிகளுக்குத் தெரியாமல், அலுவலகத்தில் கொடுக்கல் - வாங்கலில் ஈடுபட வேண்டாம். மேலதிகாரிகளைப் பற்றி தலைமையிடத்தில் புகார் கூறும் எண்ணத்தை கைவிடவும். வீண் விவாதங்களில் ஈடுபடாதீர்கள். கௌரவ பதவிகள் தேடி வரும். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். சொந்த ஊரில் உங்களின் செல்வாக்கு கூடும்.
உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தை குரு பகவான் பார்ப்பதால், வீடு வாங்குவது, கட்டுவது நல்லபடியே நிறைவேறும். அரைகுறையாக நின்றுபோன கட்டிட பணிகளை தற்போது, முழு மூச்சுடன் முடிப்பீர்கள். கட்டிட அனுமதி, வங்கிக்கடன் ஆகியவை தாமதமின்றி கிடைக்கும். தாய் வழிச் சொத்துகள் கிடைக்கும். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். மேற்கொண்டு, கல்வியில் தன்னை மேம்படுத்திக் கொள்ள அவருக்கு அறிவுறுத்தவும். தள்ளிப்போன உங்கள் மகளின் கல்யாணத்தை விஐபிகள் முன்னிலையில் நடத்துவீர்கள். சம்பந்தியுடன் ஏதேனும் மனஸ்தாபம் இருந்தால், முதலில் பேசித்தீர்க்கவும். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கமாவார்கள். அடுத்தவரைப் பற்றி புகார் கூறித்தான் முன்னேற வேண்டும் என்பதில்லை. உங்கள் முயற்சிகள், ஆலோசனைகளை முன்வைத்து, வெற்றி பெறுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களுடைய ராசிக்கு சுகாதிபதியும், லாபாதிபதியுமான செவ்வாயின் நட்சத்திரத்தில் 14.5.25 முதல் 13.6.25 வரை குரு பகவான் பயணிப்பதால் வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் உண்டு. தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். அதே நேரத்தில் திடீர் பண வரவும் உண்டு. வியாபார வகையில் லாபம் உண்டு. சிலருக்கு ஷேர் மார்க்கெட் மூலம் பணம் வாய்ப்பு இருக்கிறது. புதிய பங்குதாரர்களுக்கும், பழைய பங்குதாரர்களுக்கும் இடையே ஏதேனும் கருத்து மோதல் இருந்தால், அதை மேலும் வளர விடாமல் பார்த்துக் கொள்ளவும். நமது வெற்றி தோல்விக்கு, அவர்களின் பங்கும் உண்டு என்பதை மனதில் கொள்ளவும். ராகுவின் நட்சத்திரத்தில் 13.6.25 முதல் 13.8.25 வரை குரு பகவான் பயணிப்பதால் குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். அமைதியாக இருந்து செயல்படுங்கள். திடீர் செலவுகள் இருக்கும். கண் வலி, கண் நோய் வர வாய்ப்பு இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். மனைவி, தாய் ஆகியோரை அவ்வப்போது மருத்துவரிடம் அழைத்துச் சென்று தக்க வைத்தியம் பார்க்கவும்.
உங்களுடைய தைரிய ஸ்தானாதிபதியும், விரயாதிபதியுமான குரு பகவான் அவருடைய நட்சத்திரத்தில் 13.8.25 முதல் 01.6.26 வரை பயணிப்பதால் திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர சகோதரிகளால் நல்லது நடக்கும். அவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். விலையுயர்ந்த நகை வாங்குவீர்கள். அரைகுறையாக நின்று போன வீட்டை முழுமையாக முடிப்பீர்கள். கிரகப்பிரவேசம் செய்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். குருபகவான் கடகத்தில் 18.10.25 முதல் 5.12.25 வரை பயணிப்பதால் அரசு காரியங்கள் உடனே முடியும். எதிர்பாராத பணம் கைக்கு வரும். சிலர் வீட்டை விரிவுபடுத்துவீர்கள். குருபகவான் 11.11.25 முதல் 11.3.26 வரை வக்ரத்தில் இருப்பதால் தடைகள் உடைபடும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சொத்து வழக்குகள் சாதகமாகும்.
வியாபாரத்தில், அடுத்தவரை நம்பி அகலக்கால் வைக்க வேண்டாம். பெரிய முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும். போட்டிகள் அதிகரிக்கும். உங்களின் கனிவான பேச்சால் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். இரும்பு, கெமிக்கல், ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயம் உண்டு. புதியதுறையில் இறங்க வேண்டாம். பங்குதாரர்கள் எடுத்தெறிந்துப் பேசினாலும், ஆத்திரப்படாதீர்கள்.
உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பதவி, சம்பள உயர்வு தேடி வரும். வெளிநாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும். கணினித்துறையினர் உற்சாகத்துடன் காணப்படு வார்கள். கலைஞர்களுக்கு அரசு பாராட்டு உண்டு.
இந்த குரு பெயர்ச்சி புதுப் புது யுக்திகையை கையாண்டு இலக்கை எட்டிப் பிடிக்க வைப்பதாக அமையும்.
பரிகாரம்: தஞ்சாவூருக்கு அருகிலுள்ள தென்குடித் திட்டையில் அருள்பாலிக்கும் வசிஷ்டேஸ்வரர் - உலகநாயகி அம்மனையும், குருபகவானையும் வியாழக்கிழமைகளில் சென்று வணங்கி வழிபட்டு வாருங்கள். கோயில் அன்னதானப் பணிக்கு உங்களால் முடிந்ததை செய்யுங்கள். எல்லா வகையிலும் வெற்றி தேடி வரும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT